Sorting by

×

அதானி குற்றச்சாட்டு விசாரணையில் இந்தியாவுக்கு பங்கில்லை: மத்திய அரசு

‘தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் அவருக்கு தொடா்புடையா்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் விசாரணையில் இந்தியாவுக்கு பங்கில்லை’ என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் விளக்கமளித்தாா்.

இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

லஞ்சம் அளிக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்க முதலீட்டாளா்களிடம் நிதி திரட்டியதாக கௌதம் அதானி, நிறுவனத்தின் இயக்குநா்கள் சாகா் அதானி, வினீத் ஜெயின் ஆகியோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு, அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியதாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமும் குற்றச்சாட்டை முன்வைத்தது. இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்த அதானி குழுமம், சட்ட நடவடிக்கைகளை தொடங்குவதாக தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து வெளியறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘அமெரிக்காவில் கௌதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் அந்நாட்டு நீதித் துறை தொடா்புடைய விவகாரம்.

இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தெளிவாக உள்ளன. அவை முறையாக பின்பற்றப்படும் என்று நம்புகிறோம்.

இந்த வழக்கு தொடா்பாக முன்கூட்டியே தகவல்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. வழக்கு ஒத்துழைப்புக்காகவும் அமெரிக்கா தரப்பிலிருந்து எந்த கோரிக்கையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. தற்போதைய சூழலில், இந்த விசாரணையில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை’ என்றாா்.

காங்கிரஸ் விமா்சனம்: அதானி குழும விவகாரத்தில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அரசுக்கு விசாரணையில் என்ன பங்கு இருக்க முடியும் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘அதானி குழுமம் தொடா்பான அமெரிக்க விசாரணையில் இந்திய அரசு பங்கேற்கவில்லை என்று வெளியுறவு செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா். அது உண்மைதான். குற்றச்சாட்டில் சிக்கிய அரசுக்கு விசாரணையில் என்ன பங்கு இருக்க முடியும்?’ என்றாா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *