Sorting by

×

அதிமுக Vs திமுக: சொத்து வரி உயர்வுக்கு யார்தான் காரணம்?

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் அடுத்தடுத்து சொத்து வரி உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், சொத்துவரி உயர்வுக்கு காரணமே அ.தி.மு.கதான் என தி.மு.கவினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அடுத்தடுத்து சொத்து வரி உயர்வு:

கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், `கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்பட மாட்டாது!’ என வாக்குறுதி அளித்திருந்தது.

தி.மு.க தேர்தல் அறிக்கை 2021

ஆனால், தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் 150% வரை சொத்துவரியை உயர்த்தியது தி.மு.க அரசு. அப்போதே அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அந்த நிலையில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள பல்வேறு கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப 25% முதல் 150% வரை சொத்து வரியை உயர்த்தப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சொத்து வரி உயர்வு அவசியம். ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிக்குழு கூறியதன் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது” என விளக்கமளித்தார்.

இந்த நிலையில்தான், கடந்த செப்டம்பர் மாத சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6% சொத்துவரியை உயர்த்தி வசூலிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போதே ‘மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்கும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது’ என அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி: சொத்து வரி ஆண்டுதோறும் 6% உயர்வு!

“ ஏற்கெனவே, தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, கடந்த 2022-ல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என தமிழ்நாடு முழுவதும் 150 சதவிகிதம் அளவிற்கு சொத்துவரியை உயர்த்தியது. இந்த பாதிப்பிலிந்தே பொதுமக்கள் மீண்டுவராத நிலையில், தற்போது இரண்டாவது முறையாக உயர்த்தியிருப்பது மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் செயல்! அரசு ஊழியர்களுக்கே ஆண்டுக்கு 3% தான் சம்பள உயர்வு எனும்போது ஏற்கெனவே 100 சதவீதம் மின்கட்டண உயர்வு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்தது சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது. இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும்” என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோவை என அடுத்தடுத்த மாநகராட்சிகளிலும் இதேபோன்று ஆண்டுக்கு 6% சொத்துவரி உயர்த்தி வசூலிக்கும் தீர்மானம் அந்தந்த மாநகராட்சி நிர்வாகங்களால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன.

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள்

தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூர் மாநகராட்சி; தரையில் அமர்ந்த அ.தி.மு.கவினர்!

அந்தவரிசையில், தற்போது திருப்பூர் மாநகராட்சியிலும் சொத்து வரியை உயர்த்தி வசூலிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று நடந்த திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்துக்கு கருப்பு உடை அணிந்தபடி வந்த அ.தி.முக கவுன்சிலர்கள் சொத்துவரி உயர்வுக்கு எதிராக தலையில் துண்டை போட்டபடி தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற தி.மு.க கூட்டணிக் கட்சியினரும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரலெழுப்பினர். அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க கவுன்சிலர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி Vs கே.என். நேரு – அறிக்கை மோதல்!

இதையடுத்து கண்டன அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு; இவற்றை கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டிடங்களுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரி என கடுமையான வரி உயர்வுகளை பொதுமக்கள் தலையில் சுமத்தும் விடியா திமுக அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அஇஅதிமுக கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் கழக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

`அ.தி.மு.கதான் காரணம்! – கே.என்.நேரு:

இதற்கு பதில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராக அ.தி.மு.க போராட்ட நாடகத்தை நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியினை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது, வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிசாமி இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.

கே.என்.நேரு, எடப்பாடி

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது. அதேபோல மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா திட்டம்’ மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைபிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்கு கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மத்திய அரசு இப்படி கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது, அவர்களோடு நட்புறவில் இருந்தவர் தான்எடப்பாடி பழனிசாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.

கே.என் நேரு

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து உள்ளாட்சி அமைப்புகளை எல்லாம் திவாலாக்கிய எடப்பாடி பழினிசாமி அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்கள் கட்சியின் கலவர ஆய்வுக் களேபரங்களை மறைத்து திசை திருப்பவும் மக்கள் மீது அக்கறை உள்ளதைப் போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். 15வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியதன் காரணமாக வேறுவழியின்றி, தமிழ்நாட்டு மக்கள் மீது மாறா அன்பும் அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக மிக குறைந்த அளவு சொத்து வரியினை உயர்த்த உத்தரவிட்டார். அந்த வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது!” என நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/VaigainathiNaagarigam

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *