Sorting by

×

`ஆன்மிகத்தை வம்பு செய்ய பயன்படுத்துகிறார்கள்; மதவாத அரசியல் போதையைத் தடுக்க வேண்டும்!’ – ஸ்டாலின்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி தென்னூர் புலவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.க பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கிய தொல்.திருமாவளவன்,

thirumavalavan

“வைகோ ஏற்றுக்கொண்ட கொள்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் விதைத்த சமத்துவக் கொள்கையில் இன்னும் உறுதிப்பாட்டோடு விளங்குகிறார் என்பதற்கு சான்றாக இந்த சமத்துவ நடைபயணம் விளங்குகிறது. அவருடைய கொள்கை உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக இது அமைந்திருக்கிறது. அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒரு நடைபயணமாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால் சமத்துவத்திற்காக போராடக்கூடிய நாம் அனைவரும் அவரோடு இந்த நடைபயணத்தில் இணைந்து நடக்க வேண்டும். அத்தனை சிறப்புக்குரிய ஒரு நடைபயணம் இது. பெரியார் இயக்கம் கண்டதும் சமத்துவத்திற்காகத்தான். பேரறிஞர் அண்ணா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்ததும் சமத்துவத்திற்காகத்தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியல் செய்ததும் சமத்துவத்திற்காகத்தான் .

அவருடைய கருத்தியல் வாரிசாக நின்று களத்தில் இருக்கிற திராவிட மாடல் என்கிற சமத்துவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற ஸ்டாலினும் இங்கே போராடிக் கொண்டிருப்பது சமத்துவத்திற்காகத்தான். மேடையில் அமர்ந்திருக்கிற அத்தனை தலைவர்களின் நோக்கமும், கூடியிருக்கிற நம்முடைய அனைவரின் நோக்கமும் சமத்துவத்திற்காகத்தான். அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்த மண்ணில் தம் இறுதி மூச்சு வரையில் ஓடி ஆடி பணியாற்றியதும் தமது வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதும் சமத்துவத்திற்காகக்தான். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு கூட்டணி அரசியலை ஸ்டாலின் இன்றைக்கு முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான தகுதியும், ஆற்றலும், வலிமையும் ஸ்டாலினுக்கு உண்டு. அந்த வகையிலே வைகோ தொடங்குகிற இந்த சமத்துவ நடைபயணத்தை அவர் தொடங்கியுள்ளது சால பொருத்தமானது. 2026 – ம் வருட தேர்தல் சராசரியான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் சனாதன சக்திகள் ஒரு புறம். அப்படி விட்டு விடமாட்டோம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் அண்ணாவின் தம்பிகள். அம்பேத்கரின் அரசியல் வாரிசுகளாகிய நாம் ஒருபோதும் விடமாட்டோம் என்கிற உறுதிபாட்டோடு ஸ்டாலின் தலைமையில் அணிதிரண்டு நிற்கிறோம். ஒரு சிலர் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பேசக்கூடியவர்களாகவும் இன்றைக்கு முகமூடிகளை அணிந்து கொண்டு நமக்கு எதிரான திரிபுவாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல. தமிழுக்கு எதிரானது அல்ல. தமிழனுக்கு எதிரானது அல்ல. தமிழ் மண்ணுக்கு எதிரானது அல்ல. அண்ணாவும், கலைஞரும் இந்தியை எதிர்க்காமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்தி வாலாக்களாக மாறியிருப்போம். திராவிடத்தால் தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூகநீதி, சமத்துவம் தான். இந்த நடைபயணம் சமத்துவ நடைபயணம் என கூறினாலும் பொருந்தும் திராவிட நடைபயணம் எனக் கூறினாலும் பொருந்தும்” என்றார்.

அடுத்து பேசிய காதர் மொய்தீன்,

“இந்திய மாநிலங்களுக்கே முன்னுதாரணமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதனால், மற்ற மாநில மக்கள் ஸ்டாலின் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள்.

மாசே துங்கின் பயணம் வரலாற்றில் முக்கியமாக உள்ளது. அது போல வைகோவின் பயணம் அமையும். 2026- ல் நடைபெறும் தேர்தல் புரட்சியாக இருக்கும். அதற்கு, வைகோ மேற்கொள்ளும் நடைபயணம் உதவும்” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

“ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்னைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. நெஞ்சுரத்தையும், ஸ்டாமினாவையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என ஆச்சர்யப்பட தோன்றுகிறது. இளைஞர்களுடைய வேகத்தையும், உத்வேகத்தையும் வைகோவிடம் காண முடிகிறது. இளைய தலைமுறையின் நலனுக்காகவும், எதிர்கால நன்மைக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம். தன் தள்ளாத 95 வயதிலும் தவறாமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும், அதற்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என தன் இறுதி மூச்சு வரை உழைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர். தன் முதுமை காலத்திலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களோடு அரசியல் செய்தவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட திராவிட யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ. நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்குத் தேவையானவற்றை முன்னிறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் நிச்சயம் வெற்றி பெறும்.

காந்தியின் நடைபயணமும், மாவோவின் நடைபயணமும் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. திராவிட இயக்க மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்ஜித்த வைகோ முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்து விட்டு நடைபயணம் மேற்கொள்கிறார். இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருளை நிச்சயம் ஒழிக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க், அதை ஒழிக்க மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர் , ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான். அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதை பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் ஒன்றிய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது.

mk stalin

அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள்

அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும் அதைவிட அவரின் உடல்நலம் பெரிது. எனவே, அவர் கவனத்துடன் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். இனி, இதுபோல் கடுமையான நடைபயணங்களை மேற்கொள்ளக் கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *