மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களுக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது என மேற்கு வங்க விவசாயத் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்ஜிகார் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடக்கவில்லை என்று அங்குள்ள இளம் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில், அரசு இந்த வழக்குத் தொடர்பாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | கான்பூரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, ஒருவர் காயம்!
இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட துர்கா பூஜை நிகழ்வு முடிந்து பேசிய விவசாயத் துறை அமைச்சர் சோவந்தேவ் சட்டோபாத்யாய், “நீங்கள் என்ன காரணத்திற்காகப் போராட்டம் நடத்துகிறீர்கள்? எதற்காக அனைத்து கோபத்தையும் அரசின் மேல் திருப்புகிறீர்கள் என நான் உங்களிடம் கேட்கலாமா?
உங்களுக்கான நிதி ஆதாரம் என்ன? எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது?” என போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய மூத்த மருத்துவர் சுபர்னா கோஸ்வாமி, “இதுபோன்ற பேச்சுக்கள் போராட்டம் தொடர்பாக அரசின் அசௌகரியத்தையே வெளிக்காட்டுகின்றன” எனக் கூறினார்.
இதற்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான எம்பி கல்யான் பந்தோபாத்யாய், எம்எல்ஏ சௌகத் மொல்லா, தபாஸ் சட்டர்ஜி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஒன்றிணைந்ததாகக் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


