வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் – ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்யில் காட்டமான சீதோஷ்ணம்’ இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளிலும் வடமேற்கு சமவெளிகளிலும் ஏப்ரல்முதல் ஜூன் வரை, அதிக நாள்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 4 முதல் 7 நள்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் நிலவும். இந்த நிலையில், நிகழாண்டில் இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளிலும் வடமேற்கு சமவெளிகளிலும் இயல்பைவிட 2 முதல் 4 நாள்கள் கூடுதலாக வெப்ப அலை வீசக்கூடுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு பகுதிகளில் வெப்ப அலை நிலவும் நாள்களின் எண்ணிக்கை இந்த கோடை காலத்தில் வழக்கத்தைவிட இரட்டிப்பாகவும் வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளிலும், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப-அலை வீசும் நாள்கள் வழக்கத்தைவிட அதிகரிக்கக்கூடுமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பான அளவைவிட உயர்ந்தே காணப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம்(நாளைமுதல்), இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையும் இயல்பைவிட உயர்ந்தே காணப்படும். எனினும், தென்கடைக்கோடிப் பகுதிகளிலும் வடமேற்குப் பகுதிகளிலும் சில இடங்களில் இயல்பான வெப்பநிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


