சென்னை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை மழை காரணமாக,மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை வெறுசோடி காணப்பட்டது.
புயல் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை மாலை 5 மணி வரை எந்த விமானமும் இயக்கப்படாது என விமான நிலைய ஆணையக் குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன மழை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்கள் சேவையையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க |புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்
இந்த நிலையில், சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 9 சுரங்கப்பாதைகள் தவிர மற்ற சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் மழைநீர் தேங்கியுள்ள கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் – வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர் அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்துள்ளனர்.
மழைப்பதிவு
சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
கத்திவாக்கம் 12 மி.மீ., திருவெற்றியூர், தண்டையாப்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 மி.மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


