Sorting by

×

கருணாசுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் அருகே கரந்தையில் முற்கால சோழர்களால் கட்டப்பட்டதும், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய நாயகி உடன் கருணா சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் சோழர்களின் தோல் நோயை போக்கியதாக தல வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழா 12 நாள்கள் நடைபெறும். இதேபோல் இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அம்பாளுடன் சுவாமி கொடி மரம் அருகே எழுந்தரு கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது‌. அதனைதொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் பல்லாக்கு திருவிழா வருகிற 11ஆம் தேதி நடைபெறுகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *