Sorting by

×

கேதார்நாத் கோயில் பின்புறம் பனிச்சரிவு!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் இன்று (ஜூன் 30 ) பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

கோயிலுக்கு பின்புறமுள்ள மலையில் நேரிட்ட இப்பனிச்சரிவால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாக ருத்ரபிரயாகை காவல் கண்காணிப்பாளர் விஷாகா அசோக் பதானி தெரிவித்தார்.

கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் பனிச்சரிவு ஏற்படுவது இயல்பானதல்ல. இது குறித்து பேசிய மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரி நாதன் சிங் ராஜ்வார்,

”காந்தி சரோவரில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே உள்ள மலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தகுந்த அளவை விட அதிகமான பனிப்பொழிவு இருக்கும்போது பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பனிச்சரிவில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டார்.

சார் தாம் சுற்றுவட்டத்தில் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க புனித யாத்திரை தலமாக கேதார்நாத் உள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட மூன்று வழிபாட்டு தலங்களை உள்ளடக்கிய சார் தாம் யாத்திரை 10 மே, 2024 அன்று தொடங்கியது.

ஜூன் 6ஆம் தேதி வரையில் கேதார்நாத்தில் 7 லட்சம் பக்தர்கள் வருகைபுரிந்துள்ளதாக சார் தாம் யாத்திரைக் குழு தெரிவித்துள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *