கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் பார்த்திபன் என்கிற காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்ததாகவும், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்ததாக காவல்துறை கூறியது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதேபோல காவலர் பார்த்திபனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அந்த 3 பேரில் ஆசிப் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப்புக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறை சுட்டுப் பிடித்தவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது போலி என்கவுன்ட்டராக இருக்க வாய்ப்புள்ளது. எனவே விசாரணை நடத்த வேண்டும்.” என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


