Sorting by

×

கோவை நிலவரம் இதுதான்: உளவுத்துறை ரிப்போர்ட்; உற்சாகத்தில் திமுக?

2026 ஆங்கில புத்தாண்டை பொது மக்களை விட, அரசியல் கட்சிகள் அதிக ஆர்வத்துடன் வரவேற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியினர் களத்தில் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதில் கொங்கு மண்டல அரசியல் களத்தின் சூடு சற்று அதிகமாகவே உள்ளது.

திமுக மாநாடு
திமுக மாநாடு

அதிமுகவின் கோட்டையாக உள்ள அந்த பகுதியை கைப்பற்ற திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. புது வரவான தவெகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.

திமுக மேற்கு மண்டல மகளிரணி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு.” என்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 1 தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை.

கோவை

இந்தமுறை கோவையில் அதிமுகவுக்கு இணையாக அல்லது அவர்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற திமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உளவுத்துறை ரிப்போர்ட்டில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு தொகுதி ஆகிய இரண்டும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக அதிக உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் கோவை மாவட்டத்தில் முதலாவதாக சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து திமுக பணிகளை தொடங்கிவிட்டது.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கோவை தங்களின் கோட்டை என்று சொல்ல முடியாத நிலை உருவாகும். தொகுதிக்கு ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். சாதிய ரீதியான கணக்கீடுகளிலும் தெளிவாகவுள்ளோம்.

கோவையில் கவுண்டர், நாயுடு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயரும், உக்கடம் மேம்பாலத்துக்கு சி. சுப்பிரமணியம் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஒரு வாரத்தில் செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா

அடுத்தடுத்து பெரியார் நூலகம் திறப்பு, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இந்தமுறை கோவையை அவ்வளவு எளிதில் விட்டு கொடுக்க மாட்டோம்.” என்றனர். இந்த தகவலால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் அப்செட் ஆகியுள்ளனர்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *