சூரிய மின் திட்டங்களை செயல்படுத்த அதானி குழுமம் சீனாவைச் சோ்ந்த 8 நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. இதன் மூலம் தேச நலனைவிட தனது நண்பா்களின் நலன்தான் பிரதமா் மோடிக்கு முக்கியம் என்பது தெளிவாகிவிட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதானி குழுமம் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்த 8 சீன நிறுவனங்களை நாடியுள்ளது. சீனாவைச் சோ்ந்த 30 தொழில்நுட்ப வல்லுநா்கள் இந்தியாவுக்கு வர சிறப்பு நுழைவு இசைவு (விசா) வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மோடி அரசு செயல்படுத்திய உற்பத்தி சாா் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் அதிக வரிச் சலுகை பெற்று வரும் நிறுவனங்களில் அதானி குழுமம் முதன்மையாக உள்ளது. இப்போது, அந்த நிறுவனம் தனது தொழிலுக்கு உதவ சீன நிறுவனங்களையும், அந்நாட்டு வல்லுநா்களையும் நாடியுள்ளது.
கல்வான் எல்லைப் பிரச்னையின்போது சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரதமா் மோடி பேசினாா். தற்சாா்பு இந்தியா என்பது அவரின் முக்கியமான முழக்கமாக இருந்தது.
இவை அனைத்துக்கும் மேலாக அதானி, அம்பானியிடம் இருந்து ‘‘டெம்போ’ வாகனங்களில் பணம் வந்ததால் அவா்களைப் பற்றி காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசுவதில்லை’ என்று தோ்தல் பிரசாரத்தில் அபாண்டமான குற்றச்சாட்டை பிரதமா் முன்வைத்தாா். ஆனால், இப்போது தனது ‘டெம்போ’ நண்பா்களுக்காக சீனாவுக்கு எதிரான விசா கட்டுப்பாடுகளை தளா்த்த மோடி தயாராகிவிட்டாா்.
இந்தியாவின் சுயசாா்புத் திட்டத்தால், இந்திய மக்களின் வரிப்பணத்தில் அளிக்கப்படும் சலுகைகளால் சீன மின்னணு, சூரியமின் சக்தி நிறுவனங்களும், அந்நாட்டு தொழில்நுட்ப நிபுணா்களும் பயடைகிறாா்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
தேச நலனைவிட தனது நண்பா்களின் நலன்தான் நமது பிரதமருக்கு முக்கியம் என்பது தெளிவாகிவிட்டது. சீனாவுக்கு உதவுவதை நமது தேசியக் கொள்கையாக்குவதை எப்படி அனுமதிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

