கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் கோஷம் எழுப்பியதும், அதற்கு அருவருப்பான வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க-வின் இரண்டு அமைச்சர்களின் அருவருப்பான செயல்பாடு அந்த புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு அவமானமாக அமைந்துள்ளது.

அமைச்சர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கவே இல்லை. இத்தேரோட்டம் முழுக்க முழுக்க பக்தர்களின் பங்களிப்போடு அவர்களின் கஷ்ட நஷ்டங்களை தீர்ப்பதற்காக பன்னெடுங்காலமாக நடந்து வரும் புனித நிகழ்ச்சியாகும். அதில் ஒரு சிறு பிரச்னை ஏற்பட்டபோது அதை கையாளத்தெரியாமல் அமைச்சர் சேகர் பாபு பயன்படுத்திய வார்த்தைகள், திருத்தேரின் வடத்தை பிடிக்க அவர் அருகதை அற்றவர் என்பதை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது.
இத்தேரோட்டத்தில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ‘நீ சோற்றை சாபிடுகிறியா, அல்லது வேறு எதையாவது சாப்பிடுகிறியா’ என அவர் வழக்கமாக சாப்பிடும் உணவை தேர்த் திருவிழாவை காணவந்த பக்தர்கள் சாப்பிடுகிறார்களா? என்று கேட்டிருப்பது அருவருப்பின் உச்சம். சாபம் நீக்கிய திருத்தலத்தில் இருந்து அமைச்சர் சாபம் பெற்றுவிட்டு சென்றிருக்கிறார்.
ஆலயத்தையும், பக்தர்களையும் அவமானப்படுத்திய சேகர் பாபுவை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை இந்த நடவடிக்கை எடுக்க தயக்கம் இருக்குமானால், குறைந்தபட்சம் அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவரை கட்டாயமாக மாற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் செய்த பாவங்களில் ஒன்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜை அமைச்சராக பெற்றது. தனது சொந்த மத தெய்வத்தின் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது. பிற மதத்தைச் சேர்ந்த தெய்வங்களை இழிவுபடுத்தவும் அவர் தவறியதில்லை. மாவட்ட மக்களை சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வரும் மனோதங்கராஜை தனது பக்கத்தில் வைத்துக்கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் பேசிய பேச்சுக்கள் எந்த மதத்தைச் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சேகர் பாபு தன்னுடைய தவறான பேச்சுக்களுக்கும், நடத்ததற்கும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தானாக முன்வந்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது அவருக்கு நல்லது. இல்லையெனில் மக்களால் துரத்தியடிக்கப்படும் காட்சியை அவர் கண்கூடாக காண இருக்கிறார் என்பதை அழுத்தத்துடன் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இவர்களின் கைப்பட்ட திருத்தேருக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதை இவர்கள் செய்யமாட்டார்கள். அவர்கள் ஆடும்வரை ஆடட்டும். இன்னும் சிலமாதங்கள்தான். அதன்பிறகு வரும் புதிய ஆட்சியில் திருத்தேருக்கும், திருவடத்துக்கும் தேவையான பரிகாரங்கள் செய்யப்படும். இரண்டு அமைச்சர்களும் வினையை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். தன்வினை தன்னைச்சுடும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


