கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைக்க இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த் உள்ளிட்டோர் வந்திருந்தனர். தேரோட்டம் நிகழ்ச்சியின்போது அமைச்சர் சேகர் பாபுவை நோக்கி பக்தர்கள் கோஷம் எழுப்பினர். அதில் சிலர், ‘பாரத்மாதாகீ ஜெய்’ என்றும், ‘வீரசிவாஜீக்கு ஜெய், வீரசவார்க்கருக்கு ஜெய்’ எனவும் கோஷம் எழுப்பினர். சிலர் ‘அல்லோலியா பாபு’ என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் டென்சனான அமைச்சர் சேகர் பாபு, “சோத்தைத் திங்கிரியா இல்லை… திங்கிறியா” எனக் கேட்டு கொந்தளித்தார். மேலும், ‘ஆம்பளையாக இருந்தால் இங்க வந்து சொல்’ என்றதுடன், கோஷமிட்டவர்களிடம் மேலும் சில வார்த்தைகளைப் பேசி ஆவேசமானார் சேகர்பாபு.

அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் சேகர் பாபு அங்கிருந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “இறையன்பர்களின் வசதிக்காக எண்ணற்ற பல நலத்திட்டங்களை இந்துசமய அறநிலையத்துறை செய்துவருகின்ற பல காலங்களில் சிறந்த காலமாக இந்த ஆட்சியினுடைய காலத்தை எடுத்துக்கொள்ளலாம். எங்களின் இறைப்பணி தொடரும்.

இறைவனை வழிபடுகின்ற நேரத்தில் பிரிவினைகள் வேண்டாம். இறைவழிபாடில் தகாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம். இறைவழிபாட்டை அமைதியான முறையில் கடைபிடியுங்கள் என்று, தேவையற்ற கோஷங்களை எழுப்பிய நண்பர்களுக்கு என்னுடைய வேண்டுகோளாக கூறுகிறேன். துறை சார்ந்த அமைச்சர் என்பதால் இதை அவர்களுக்கு கனிவுடன் வேண்டுகோளாக வைக்கின்றேன்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


