Sorting by

×

திருத்தணி: “எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?” – சந்தோஷ் நாராயணன்

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிரச் செய்தது.

இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்கள் கண்டனத்தையும், கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், நடிகரும், பா.ஜ.க. தேசிய பொதுக் குழு உறுப்பினருமான சரத்குமார், “திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு இளைஞர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்திருக்கின்றனர்.

அந்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரிய செயல். சமூக வலைதள மோகத்தால் மிருகத்தனமான போக்கிற்கு மனித சமூகம் மாறி வருவது வெட்கக்கேடானது.

வட மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டால் கொந்தளிப்பவர்கள், இன்று தமிழகத்தில் வட மாநில இளைஞருக்கு நேர்ந்த அவலம் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவப்பெயரை உண்டாக்கியதைக் கண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

சரத்குமார்
சரத்குமார்

சமூக குற்றங்களைக் கூட சாதாரணமாகச் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ள சூழலில், மக்கள் மத்தியில் வைரல் ஆக வேண்டும் என்று இப்படி வெறி பிடித்திருக்கிறார்கள்.

அந்த வெறியை முறியடிக்கவும், சமூக சீர்கேட்டு குற்றத்தின் அடிப்படையான போதைப்பொருள் ஊடுருவலை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

மேலும், குற்றவாளிகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்ற பாரபட்சம் காட்டி அவர்களை சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பாமல், கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கினால் மட்டுமே மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்ற அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் எக்ஸ் பதிவில், “கடந்த பத்தாண்டுகளாக நான் சென்னையில் வசித்து வரும் பகுதி, குறிப்பாக இரவில், போதைப்பொருட்களுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது.

எனது ஸ்டுடியோ தளத்தில் பணிபுரியும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாள நண்பர்கள் பலமுறை தாக்கப்பட்டிருக்கின்றனர்.

அதுபோன்றதொரு சம்பவத்தின்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், அதீத போதையில் இருந்தான். காவல்துறை அதிகாரி அவனை தடியால் அடித்தபோதுகூட எந்த வலியும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான். இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருக்கின்றனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களைக் கண்மூடித்தனமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.

பல உள்ளூர் அரசியல் பிரிவுகளும், பல சாதி அடிப்படையிலான குழுக்களும், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக ஓடி வருகின்றனர். இந்தச் சம்பவங்களின் எதார்த்ததை நாம் ஏற்றுக்கொண்டு, இன்னும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?

திரையில் சித்தரிக்கப்படும் வன்முறைக்கும், சமீபத்தில் நடந்ததைப் போன்ற நிஜ சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. நான் உட்பட நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *