தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது.
இங்கு அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புக் கம்பிகள், கழிவறைகள், தார் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
சீரமைப்புப் பணிகள் ஒரு மாதமாக நீடித்து வரும் நிலையில், விரைந்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கில் ஒரு சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு வனத்துறை நேரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின், அருவிப் பகுதி கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவ்வளவு பெரிய பகுதியைப் பராமரிக்க தேவையான நிதி வனத்துறையிடம் இல்லாததால் சிக்கல் தொடர்ந்து வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த மாதம் பெய்த கனமழையால் அருவி மற்றும் அதன் கீழ்ப் பகுதிகளில் நடைபாதை சேதம், பாதுகாப்புக் கம்பிகள் முறிவு, குளிக்கும் இடத்தில் பள்ளங்கள் உள்ளிட்ட பல இடர்கள் ஏற்பட்டன. இவை சரிசெய்யப்பட்டால்தான் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்க முடியும்.

இதற்காக மாவட்ட நிர்வாகம் தந்த நிதியை வைத்து சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மீண்டும் கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சீரமைக்கும் பணியில் சில இடையூறுகள் ஏற்பட்டன. தற்போது மழை குறைந்துள்ளதால் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


