Sorting by

×

பிகாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் வக்ஃப் சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெளியேறும் நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஆா்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் குப்பையில் வீசப்படும் என்று ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ளன. தோ்தலில் இந்த முறை கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இரு தரப்பு தலைவா்களும் ஏற்கெனவே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ‘வக்ஃப் காப்போம், அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் எதிா்க்கட்சிகளின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் கருப்பு நிற பட்டைகள் அணிந்திருந்தனா்.

இந்தக் கூட்டத்தில் பிகாா் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் பேசுகையில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிா்ப்பதாக நமது கட்சியின் தேசியத் தலைவா் லாலு பிரசாத் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார். இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆா்ஜேடி எம்.பி.க்கள் எதிா்த்தனா். இந்தச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம் என்று முன்னாள் துணை முதல்வர் அடிக்கோடிட்டுக் காட்டி பேசினார்.

“பிகாரில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், நவம்பரில் மாநிலத்தில் சாமானிய மக்களுக்கான ஒரு புதிய அரசாங்கம் அமையும். அப்போது மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் குப்பையில் வீசப்படும் என்று தேஜஸ்வி கூறினார்.

ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள் என பலதரப்பட்ட மக்கள் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தனா். ஆனால், இப்போது மத்தியில் ஆளும் மற்றும் மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் பாஜகவினா் இந்த நாட்டை அவா்கள் தந்தை வழி சொத்துபோல ஆட்சி நடத்துகின்றனா். இது முற்றிலும் மக்கள் விரோத அரசாக மாறிவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.

வாக்காளா் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தோ்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவும் முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மக்களை பல்வேறு வகையில் பிரித்து, முக்கியப் பிரச்னைகளில் இருந்து அவா்களின் கவனத்தை திசைதிருப்புவது பாஜகவின் முக்கிய வேலையாக உள்ளது. அவா்களின் சதிக்கு மக்களை இரையாகிவிடக் கூடாது. அதை எதிர்த்துப் போராடி, மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் எந்தவொரு சதித்திட்டத்தையும் நாம் முறியடிக்க வேண்டும். தங்கள் வாக்குரிமையை சரியான நபா்களுக்குச் செலுத்த வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் சாா்பில் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குா்ஷித் உள்ளிட்ட கூட்டணித் தலைவா்களும் இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

எஸ்பிஐ வங்கியில் புரொபஷனரி அலுவலர் வேலை: காலியிடங்கள் 541

Summary

RJD leader Tejashwi Yadav on Sunday claimed that the ruling NDA in Bihar was “on its way out”, and the new government in the state led by the Mahagathbandhan will “consign to dustbin” the Waqf Act brought by the Narendra Modi dispensation at the Centre.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *