இந்தியாவின் பாரம்பரியக் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. இவருக்கும் தொழிலதிபர் ராபர்ட் வத்ரா என்பவருக்கும் 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ரைஹான் வத்ரா என்ற மகனும், மிராயா வத்ரா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சியதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரைஹான் வத்ரா அவிவா பெய்க் என்றப் பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலிப்பதாகவும் அவருக்கே திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யார் இந்த அவிவா பெய்க்?
டெல்லியைச் சேர்ந்த அவிவா பெய்க்கின் குடும்பத்துக்கும் பிரியாங்கா காந்தியின் குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் எனக் கூறப்படுகிறது. அவிவா பெய்க் மூன்று நாட்களுக்கு முன்பு ரெய்ஹானுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவிட்டிருந்தார். அதை இப்போது மூன்று ஹார்ட் ஈமோஜிகளுடன் ‘ஹைலைட்ஸ்’ பிரிவில் வைத்துள்ளார்.
அவிவா பெய்க் லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் படித்திருக்கிறார். மேலும் டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். புகைப்படக் கலைஞராகவும் வலம் வருகிறார். இவர் தனது படைப்புகளை ‘யூ கேன்நாட் மிஸ் திஸ்’ (2023), தி குவோரம் கிளப்பில் ‘தி இல்யூசரி வேர்ல்ட்’ (2019), மற்றும் இந்தியா டிசைன் ஐடி, கே2 இந்தியா (2018) ஆகிய கண்காட்சிகளில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், ‘அட்லியர் 11’ என்ற புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கிறார். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள ஏஜென்சிகள், பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும், அவிவா பெய்க் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
பிளஸ்ரிம்னில் ஒரு ஃப்ரீலான்ஸ் தயாரிப்பாளராக உள்ளார். ப்ரோபகண்டாவில் திட்ட மேலாளராகவும், ஆர்ட் செயின் இந்தியாவில் சந்தைப்படுத்தல் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார், மேலும் ஐ-பார்லிமென்ட்டில் ‘தி ஜர்னல்’ பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவர் வெர்வ் மேகசின் இந்தியா மற்றும் கிரியேட்டிவ் இமேஜ் மேகசின் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார்.

பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வத்ராவும் புகைப்படக் கலைஞர். அவர் பத்து வயது முதல் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக ஈடுபட்டுவருகிறார். அவரது படைப்புகளில் வனவிலங்கு, தெருக்கள், வணிகப் புகைப்படங்கள் முக்கிய இடங்களைப் பிடிக்கிறது. பள்ளி கிரிக்கெட் போட்டியின் போது ரெய்ஹான் வத்ராவுக்கு கண்ணில் காயமேற்பட்டது. அந்த விபத்தைத் தொடர்ந்து, அவர் கருப்பு-வெள்ளை புகைப்படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டார்.
நிழல் மற்றும் மாறுபாடுகளைப் பயன்படுத்தி காட்சியில் ஆழத்தை உருவாக்கினார். பிரியங்கா காந்தி வத்ராவின் ஊக்கத்துடன், ரெய்ஹான் தனது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் புகைப்படங்களிலிருந்து உத்வேகம் பெற்று தனது கலையை தொடர்ந்து வளர்த்து வருகிறார். ரெய்ஹான் வத்ராவின் முதல் தனிப்பட்ட கண்காட்சி புது டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


