ஃபென்ஜால் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைத்து கடற்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து புயலின் அபாயத்தை குறிக்கும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று(நவ.30) காலை முதல் புதுச்சேரி மாநிலத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. கடல் அலைகளின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பிலும் காவல்துறை சார்பிலும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைச் சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளன.
கடலோரப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்கரைப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கடற்கரைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கூறுகையில், “ஃபென்ஜால் புயலை எதிர்கொள்ள அரசும், காவல்துறையும் தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை
புதுச்சேரியில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 12 லட்சம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில், “மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வேறு பகுதிகளில் தங்கவைத்துள்ளோம். மேலும் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் உதவி தேவைப்படுபவர்கள் 112, 1077 மற்றும் 94889 81070 என்ற வாட்ஸ்அப் எண்கள் ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


