மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறப்பு விழா காணாத 90 டிகிரி மேம்பாலம் என புகழ்பெற்ற ரயில்வே மேம்பாலத்துக்கு வந்த கடுமையான விமர்சனத்தால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுமானப் பணியை ஒப்பந்த முறையில் மேற்கொண்டிருந்த இரண்டு நிறுவனங்கள், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
போபாலில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே, 90 டிகிரி கோணத்தில் திருப்பம் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். இது குறித்து கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தன.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறுகையில், ஐஷ்பாக் ரயில்வே மேம்பாலக் கட்டுமான வடிவமைப்புப் பணியில் மிக மோசமான தவறு நேரிட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படிருப்பதாகவும், பொதுப் பணித் துறை பொறியாளர்கள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற கண்காணிப்புப் பொறியாளருக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேம்பாலக் கட்டுமான நிறுவனம் மற்றும் வடிவமைத்த நிறுவனம் என இரண்டும் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 90 டிகிரி கோண மேம்பாலத்தில், வாகன ஓட்டிகள் எவ்வாறு தங்களது வாகனத்தை திருப்புவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


