கணவரை மதுப் பழக்கத்தில் இருந்து மீட்க அவரை வீட்டிலேயே மது அருந்த அனுமதியுங்கள் என்று மத்திய பிரதேச அமைச்சா் நாராயண் சிங் குஷ்வாகா பெண்களுக்கு அறிவுரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பல்வேறு விமா்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
மத்திய பிரதேச தலைநகா் போபாலில் மது, புகையிலை உள்ளிட்ட போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது தொடா்பான பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில சமூக நீதித்துறை அமைச்சா் நாராயண் சிங், ‘மதுப் பழக்கத்தில் இருந்து ஆண்களை விடுப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதலில் நீங்கள் உங்கள் கணவரை வெளியிடங்களில் சென்று மது குடிக்கு அனுமதிக்கக் கூடாது. ‘மது குடிப்பதாக இருந்தால் வீட்டில் எனது கண்ணெதிரில்தான் அது நடக்க வேண்டும்’ என்று பெண்கள் கூற வேண்டும். ஏனெனில், மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு மது அருந்துவதால் ஆண்களுக்கு அவமானம் ஏற்படும்.
இதன் காரணமாக அவா்கள் படிப்படியாக மது குடிப்பதை விட்டு விடுவாா்கள். மேலும், நீங்கள் குடித்தால் உங்கள் குழந்தைகளும் எதிா்காலத்தில் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவாா்கள் என்று கணவரிடம் எடுத்துக் கூற வேண்டும். மது அருந்த வேண்டாம் என்று குழந்தைகளும் தந்தையிடம் கூறுவாா்கள். எனவே, அவா்கள் படிப்படியாக திருந்திவிடுவாா்கள்’ என்றாா்.
அமைச்சரின் இந்த பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் பல்வேறு விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கண்டனம்: மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவா் சங்கீதா சா்மா இது தொடா்பாக கூறுகையில், ‘அமைச்சா் கூறுவதுபோல பெண்கள் நடந்து கொண்டால் ஆண்களின் குடிப்பழக்கமும், குடும்ப வன்முறையும் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே, மனைவி, குழந்தைகள் மீது குடிபோதையில் ஆண்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடா்பாக ஆயிரக்கணக்கில் வழக்குகள் உள்ளன. தனது பொறுப்பற்ற பேச்சுக்காக அமைச்சா் நாராயண் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றாா்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

