“மியான்மரில் இருந்து தாய்லாந்துக்குத் தப்பி வந்த 500 இந்தியர்களை, இந்தியா மீண்டும் அழைத்துக்கொள்ளும்” என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் மாஃபியாக்களால் நடத்தப்படும் கே.கே பார்க் மோசடி, சைபர் கிரைம் காம்பவுண்டில் மியான்மர் ராணுவம் சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்தவாரம் நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக 28 நாடுகளைச் சேர்ந்த 1500 பேர் தாய்லாந்து எல்லை நகரமான மே சோட்டுக்குத் தப்பிச் சென்றனர்.
இந்த சோதனையில் இருந்து தப்பிய 500 இந்தியர்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
பெருகிய மோசடி காம்பவுண்ட்கள்
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மியான்மர், லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் எல்லைகளில் மோசடி மையங்கள் பெருகியுள்ளன. லட்சக்கணக்கான மக்களை கடத்திச் சென்று இந்த மையங்களில் வேலை செய்ய வைப்பதன்மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
கே.கே பார்க் நாடு கடந்த சைபர் மோசடிகளுக்கு பெயர்பெற்ற இடமாக உள்ளது. இந்த பெரிய வளாகமும் மற்ற மையங்களும் பெரும்பாலும் சீன மாஃபியா கும்பல்களால் நடத்தப்படுகின்றன.
இவற்றைப் பாதுகாக்க உள்ளூர் ஆயுத கும்பல்களும் சில நேரங்களில் மியான்மர் ராணுவத்துடன் இணைந்த குழுக்களும் செயல்படுகின்றன.

திருப்பி அனுப்பத் திட்டம்
தப்பி வந்தவர்களின் சட்டப் பின்னணியை சரிபார்த்து விரைவாக திருப்பி அனுப்ப இந்தியாவின் தூதர் தாய்லாந்து குடியேற்ற தலைமை அதிகாரியை சந்திப்பார் என பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் நமக்கு இந்த சுமையைத் தர விரும்பவில்லை. நேரடியாக மே சோட்டுக்கு விமானம் அனுப்பவுள்ளனர்” எனக் கூறியுள்ளார் அனுடின்.
தாய்லாந்தில் தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்தபிறகு அவர்களின் தேசிய குடியுரிமை சரிபார்க்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவுத்துறை செயலளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


