மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15-ம் தேதி மாநகராட்சி தேர்தல்கள் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் முதல் முறையாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இது தவிர காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
227 வார்டுகளில் மொத்தம் 1700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளான நேற்று 453 பேர் தங்களது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இத்தேர்தலுக்காக தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் இணைந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் ஸ்வாபிமான் நிதி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். 700 சதுர அடி வரையுள்ள வீடுகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். குடியிருப்பு கட்டடங்களில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவமாக வழங்கப்படும். குப்பைகளை சேகரிக்க வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும். ரூ.10-ல் சாப்பாடு வழங்கப்படும். மும்பை மாநகராட்சியில் சொந்த ஆம்புலன்ஸ் சேவை, புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்படும்.
மும்பை மாநகராட்சி பார்க்கிங்கில் இலவச பார்கிங் அறிமுகம் செய்யப்படும், பஸ் கட்டணம் குறைப்பு, குடியிருப்பு கட்டடங்களுக்கு சிறப்பு நிதி என்பது உட்பட ஏராளமான இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பஸ் பயணம், இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என திட்டங்களை அள்ளி தெளித்துள்ளனர். அதோடு வரும் நாட்களில் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் தேர்தலில் தாக்கரே பிராண்ட் எடுபடப்போவதில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”தாக்கரே சகோதரர்கள் 2009-ம் ஆண்டு ஒன்று சேர்ந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கும். இப்போது அவர்கள் ஒன்று சேர்ந்த எந்த பயனும் இல்லை. அவர்களின் வாக்கு வங்கி மிகவும் குறைவு. அவர்களுக்கு மராத்தியர்களோ அல்லது மராத்தியர்கள் அல்லாதவர்களோ வாக்களிக்கப்போவதில்லை. எனவே அவர்கள் ஒன்று சேர்ந்ததை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்கள் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. எங்களது ஓட்டு எங்களை விட்டு செல்லாது. எப்போதும் எங்களுடன் இருக்கும்.
மும்பைக்கு மராத்தி, இந்து மேயர் எங்களது கூட்டணியில் இருந்து வருவார். மும்பை மற்றும் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் ஏராளமான கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். மும்பை கடற்கரை சாலை திட்டத்திற்காக பல முறை டெல்லி சென்று இருக்கிறேன். கடற்கரை சாலை திட்டத்திற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று அனுமதி வாங்கி இருக்கிறோம். உத்தவ் தாக்கரே குறுகிய எண்ணம் கொண்டவர். இச்சாலையை யார் அமைப்பது என்று வந்தபோது மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

நானும் சம்மதித்தேன். திடீரென ஒரு நாள் என்னிடம் கூட சொல்லாமல் இச்சாலை கட்டுமான பணிக்கு உத்தவ் தாக்கரே பூமி பூஜைபோட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் யார் இந்த சாலையை கொண்டு வந்தது என்று ஒட்டுமொத்த மும்பைக்கும் தெரியும்”என்று தெரிவித்தார். மும்பையில் பா.ஜ.க பல மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி 165 வார்டுகளிலும், பா.ஜ.க 135 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே) 90 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


