உத்தரப் பிரதேசத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், ’ஆட்சி மாற்றத்துக்கு’ முஸ்லிம்கள் வழிவகுப்பார்கள் என்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ மெகபூப் அலி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரும் அம்ரோஹா தொகுதி எம்எல்ஏ-வுமான மெகபூப் அலி, ஞாயிற்றுக்கிழமை(செப். 29) நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அவர் பேசியதாவது, “உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக 2027-இல் பாஜக ஆட்சி நீக்கப்படுவதுடன், சமாஜவாதி கட்சி ஆட்சியமைக்கும். அரசமைப்புக்கும் இடஒதுக்கீட்டுக்கும் எதிரானது பாஜக” என்று பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியிடமிருந்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது பாஜக. அதனைத்தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும், பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று, தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியமைத்துள்ளது.
கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சமாஜவாதி – காங்கிரஸ் இணைந்த ’இந்தியா’ கூட்டணி எதிர்பார்த்ததைவிட பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இதே நிலை நீடித்தால், அடுத்ததாக 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில், பாஜகவை விட சமாஜவாதி தலைமையிலான கூட்டணி அநேக இடங்களில் வெற்றி பெறும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில், பாஜக ஆட்சி அகற்றப்படுவதற்கு, முஸ்லிம் மக்கள்தொகை உயர்ந்திருப்பது முக்கிய காரணமாக அமையலாம் என்பதே சமாஜவாதி தலைவர் மெகபூப் அலியின் கருத்தாக உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


