கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாணகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவரின் உடல் பாறை இடுக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஷிஹாப் சூரல்மலைப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மத குருவாக பணியாற்றி வந்துள்ளார். நிலச்சரிவின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஷிஹாப் இருந்த பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஷிஹாப் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

