Sorting by

×

‘விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!’ – உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் அடங்கிய அந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண் ராஜை சந்தித்து பேசினோம்.

அருண் ராஜ்
அருண் ராஜ்

திடீரென இப்படியொரு நிர்வாகக்குழு எதற்காக? கட்சிக்குள் இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?

எல்லா தரப்பின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்பதால்தான் தலைவர் இப்படியொரு குழுவை நியமித்திருக்கிறார். இந்தக் குழு கலந்து பேசி எடுக்கும் முடிவுகளை தலைவர் முன் வைப்போம். அவர் அதை அலசி ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பார். முதல் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்து விரிவாக பேசினோம். அதேமாதிரி, தேர்தல் ஆணையத்தின் SIR யை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதைப்பற்றியும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினோம்.

நவம்பர் 5 ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். அதற்கான திட்டமிடல்கள் பற்றியும் விவாதித்தோம்.

தவெக நிர்வாகக் குழு கூட்டம்
தவெக நிர்வாகக் குழு கூட்டம்

விஜய் கரூருக்கு செல்லாததும் அந்த மக்களை சென்னை அழைத்து வந்து பார்த்ததும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறதே?

கரூருக்கு சென்று அந்த மக்களை சந்திக்க வேண்டுமென்பதுதான் தலைவரின் விருப்பம். ஆனால், எங்களுக்கு மண்டபம் கிடைக்கவில்லை. கல்லூரி அரங்குகளில் நடத்துவதற்கு கூட முயன்றோம். எங்கும் இடம் கிடைக்கவில்லை. உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அனுமதி கிடைத்த இடங்களில் காம்பவுண்ட் சுவர் கூட இல்லை.

அருண் ராஜ்
அருண் ராஜ்

அதேமாதிரி, காவல்துறையினர் 2 மணி நேரத்துக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். அதிகபட்சம் போனால் மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். ஆனால், தலைவர் அந்த குடும்பங்களிடம் உளமாற மனமுருகி பேச நினைத்தார். அதனால் எந்த நேரக்கட்டுப்பாட்டையும் எனக்கு விதிக்காதீர்கள் என்றார். மகாபலிபுரத்தில் நீங்களே பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட 9 மணி நேரம் மக்களை சந்தித்து மனமுருகி ஆறுதல் கூறியிருந்தார்.

கரூரில் இடம் கிடைக்கவில்லை என்றும் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறீர்கள். இதில் திமுகவினரின் விமர்சனத்தை கவனித்தீர்களா? ஒருவேளை கரூரில் நாங்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் அதே அழுத்தத்தை சென்னையிலும் கொடுத்திருக்க மாட்டோமா. இதிலிருந்தே தவெகவினர் சொல்வது பொய்யென தெரியவில்லையா என்கிறார்களே?

சென்னையில் சிக்கல் கொடுக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சென்னையிலும் அதே சிக்கலை கொடுக்கத்தான் செய்தார்கள். எங்களுக்கு மண்டபம் கொடுத்தால் ஆளுங்கட்சியின் கோபத்துக்கு உள்ளாக வேண்டுமென உரிமையாளர்கள் அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை நிலை.

TVK Arun Raj
TVK Arun Raj

தவெக கொல்லும்; நீதி வெல்லும்!’ என முரசொலி கட்டுரை வெளியிடுகிறது. கரூர் சம்பவத்துக்கு விஜய்யும் தவெகவும்தான் காரணமென திமுக குற்றஞ்சாட்டுகிறதே?

41 உயிர்களை வைத்து திமுக அரசியல் செய்கிறது. தங்களின் நிர்வாகக் கோளாறுகளை மறைக்க கரூர் சம்பவத்தை பயன்படுத்திக் கொள்கிறது. உண்மை என்னவென்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். சிபிஐயிடமும் ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியிடமும் எங்கள் தரப்பின் வாதத்தையும் உண்மைகளையும் எடுத்துக் கூறுவோம்.

அஜித் குமார் லாக் அப் டெத்தில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து தவெக கடுமையாக விமர்சித்தது. இப்போது மட்டும் சிபிஐ ஆர்.எஸ்.எஸ் பிடியில் இல்லையா என திமுக உங்களை விமர்சிக்கிறதே?

நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. ஆனால், நாங்கள் வழக்கை சிபிஐக்கு மாற்ற சொல்லி கேட்கவில்லையே. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்தான் கேட்டோம். நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றியது. விசாரணையில் எதாவது உறுத்தல்கள் இருந்தால் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்.

TVK Arun Raj
TVK Arun Raj

நிர்வாகக் குழு கூட்டத்தில் SIR பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. பீகாரில் SIR கொண்டு வரப்பட்ட போது எதிர்த்தீர்கள். இப்போதும் அதே எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கிறீர்களா?

நிச்சயமாக எதிர்க்கிறோம். வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தகுதியான வாக்காளர்களை நீக்குவதையும் போலி வாக்காளர்களையும் சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். நியாயமான சுதந்திரமான தேர்தல்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் தவெக எதிர்க்கும்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு அதிமுகவும் பாஜகவும் தவெகவை ஏகபோகமாக ஆதரிக்கிறார்கள். எடப்பாடியின் பிரசாரத்தில் தவெக கொடிகளை பார்க்க முடிகிறது. ஆனால், தவெக தரப்பில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி திட்டங்களை வகுத்து வந்தீர்கள். கரூர் சம்பவத்துக்கு பிறகு கூட்டணியைப் பற்றிய எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

விக்கிரவாண்டி மாநாட்டிலேயே தலைவர் உறுதியாக கூறிவிட்டார். தவெகவின் தலைமையை ஏற்கும் திமுக, பாஜக தவிர்த்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். எடப்பாடியின் கூட்டத்தில் தவெக கொடியை அசைத்தவர்கள் உண்மையான தவெக தொண்டர்கள்தானா என்பதை நீங்களே தேடிப்பாருங்கள்..

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *