ரமலான் பண்டிகையை விழுப்புரம் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ஸாமியர்கள் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் காலம் உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையான நோன்பிருந்து, பசித்துன்பத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, சகிப்புத் தன்மையும், அன்பு, இரக்கம், கருணை, ஈகை என்னும் பண்புகள் சிறக்க இஸ்லாமியர்களால் ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
மார்ச் மாதம் 1-ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தொடர்ந்து 30 நாள்கள் நோன்பிருந்து, இஸ்லாமியர்கள் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் சிறப்புத் தொழுகை நடத்தினர். ரமலான் பிறை ஞாயிற்றுக்கிழமை தெரிந்ததையடுத்து, மார்ச் 31-ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு காஜி அறிவித்திருந்தார்.
ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் இஸ்லாமியர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் முஹம்மதியாபேட்டை முஹம்மதியா பள்ளிவாசல் வளாகத்திலுள்ள ஈத்கா திடலிலும், விழுப்புரம் நகராட்சி மைதானத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியே தொழுகை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!
இதுபோன்று விழுப்புரம் பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்குத்தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளி வாசல், மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல், வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல், மருதூர் தக்வா மஸ்ஜித் பள்ளிவாசல், புதுச்சேரி சாலை ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்ளிட்ட விழுப்புரம் நகரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இதுபோல் மாவட்டத்தில் திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளவனூர், செஞ்சி, மரக்காணம், கோ லியனூர், காணை என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையிலும் அவர்கள் ஈடுபட்டனர். ரமலான் பண்டிகையையொட்டி விழுப்புரம் நகரிலுள்ள அசைவ உணவகங்களில் பிரியாணி விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


