மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த ஏற்கெனவே மாநில அரசால் இருமுறை அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவையனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் ஹிந்தி எதிர்ப்பு எதிரொலித்ததால், பாஜக அரசு எடுத்துள்ள தற்காலிக நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
ஏனெனில், பள்ளிகளில் மொழி கொள்கை வகுக்க ’நரேந்திர ஜாதவ் கமிட்டி’ என்ற நிபுணர் குழுவையும் அமைத்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.
“இந்த கமிட்டி, மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஏற்கெனவே மாஷேல்கர் கமிட்டி சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்வதுடன், அதனை எதிர்ப்போர் தரப்பிடமும் ஆலோசித்து கருத்துகளைக் கேட்டு அதன்பின், அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கும். அதன்பேரில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மகராஷ்டிர மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், ‘அனைத்து ஆங்கில வழி மற்றும் மராத்தி வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்’ என்று ஆணையிட்டிருந்தது. அதன்பின் எழுந்த கடுமையான எதிர்ப்புகளால், மேற்கண்ட உத்தரவு மாற்றப்பட்டு ‘ஹிந்தியை விருப்ப மொழியாக கற்பித்தால் போதுமானது’ என்று கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
Anti-Hindi backlash: Maharashtra’s three-language policy being withdrawn – CM Fadnavis
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


