இலங்கையில் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கிய மழை இன்னும் கொட்டித்தீர்த்து வருகிறது. இதோடு இப்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாகவும் இலங்கை வரலாறு காணாத பெரும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது.
மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் 69 பேர் பலியாகி உள்ளனர். 34 பேரைக் காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என நேற்று இரவு இலங்கை பேரிடர் மேலாண் மையம் அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவித்திருக்கிறது.

இன்று டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 380 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் வடக்கு இலங்கை பகுதியில் இப்புயல் மையம் கொண்டுள்ளதால், மழை காரணமாக இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு 20 குழந்தைகள் உள்பட 120 பேர் சிக்கி காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து மீட்புப் படைகள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.
தற்போது கிடைத்த தகவலின்படி பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123ஆக அதிகரித்திருப்பதாகவும், 130 பேர் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள இலங்கை அரசு ‘அவசரகால நிலைப் பிரகடனம்’ அறிவித்திருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


