Sorting by

×

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் – அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என ஐஐடி கான்பூர், தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட்
ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட்

கடந்த மாதம் நடைபெற்ற ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் பங்கேற்ற மாணவரொருவர், தேர்வறையில் எழுந்த கடும் சிக்கல்களால் தேர்வு எழுதும்போது பாதிப்படைந்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனுவில், “தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தேர்வு எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது கணினித் திரை தொடர்ந்து மின்னிக் கொண்டே இருந்தது. மேலும், மிகக்குறைந்த பிரகாசத்தில் கணினித்திரை இருந்ததால், திரையில் உள்ள எதையும் என்னால் சரியாகப் படிக்க இயலவில்லை. அது மிகவும் கடினமாக இருந்தது.

பல்லி

தேர்வின் பிற்பாதியில், நிலை இன்னும் மோசமடைந்துவிட்டது. எனது கணினிக்கு மிக அருகில் ஒரு பெரிய பல்லி வந்துவிட்டது. தேர்வு முழுவதும் பல்லியைக் கண்டு நான் பயப்பட நேர்ந்தது. அந்த பல்லி தேர்வறையிலிருந்து மூன்று முறை அகற்றப்பட்டது. ஆனால், மூன்று முறை அகற்றப்பட்டும் அது மீண்டும் மீண்டும் நான் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கிதான் திரும்பி வந்து கொண்டிருந்தது. பல சிக்கல்களால் தவிக்க நேரிட்டதால், தேர்வில் எனது திறனை சரிவர வெளிப்படுத்த இயலாமல் போனது. ஆகையால், எனது ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வின் மதிப்பெண்களை கருதாமல், என்னுடைய ஜேஇஇ மெயின்ஸ் தேர்வின் முடிவுகளை கருத வேண்டும் என நீதிமன்றத்தை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாணவரின் மனுவை விசாரித்த நீதிபதி விகாஸ் மகாஜன், ‘ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த வாக்குமூலத்தை’ குற்றம்சாட்டப்பட்ட ஐஐடி கான்பூர், தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

தேர்வு முழுவதும் செயற்கை நுண்ணறிவின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டிய நிலையில், தேர்வின்போது தேர்வறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கூட வேலை செய்யவில்லை என்பதை அறிந்த நீதிமன்றம், அதுகுறித்து கவலை வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *