Sorting by

×

Maharashtra: “மும்மொழிக் கொள்கை ரத்து” – பாஜக அரசு ‘யு டர்ன்’ ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் திருத்தப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளது அந்த மாநில பாஜக தலைமையிலான அரசு. எதிர்காலத்தில் மொழிக்கொள்கையை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ராஜ் தாக்கரே வரும் ஜூலை 5-ம் தேதி மும்பையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். இப்பேரணியை இப்போது சிவசேனா(உத்தவ்) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து நடத்த சம்மதம் தெரிவித்துள்ளன.  சிவசேனாவிலிருந்து ராஜ் தாக்ரே பிரிந்த பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இருவரும் இணையவிருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்ரே - ராஜ் தாக்ரே
உத்தவ் தாக்ரே – ராஜ் தாக்ரே

இன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்புக்குப் பிறகு, “மொழிக் கொள்கை எந்த தரநிலையிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு என்ன ஆப்ஷன்கள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முனைவர் நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த இறுதி முடிவை எடுப்போம்.

அதுவரை, ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசுத் தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சராக இருந்தபோது மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் மும்பையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜூன் 17ம் தேதி வெளியான அரசாணைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

அந்த அரசாணையின் படி, 1 – 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு இந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும். ஆனால் ஒரே வகுப்பில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு இந்திய மொழியைக் கற்ற நினைத்தால் அதற்கு பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.

அரசாணையை எரித்து சிவசேனா ஆர்ப்பாட்டம்
அரசாணையை எரித்து சிவசேனா ஆர்ப்பாட்டம்

முன்னதாக ஏப்ரல் 15-ம் தேதி 1 – 5 வகுப்பு வரை படிக்கும் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழி மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மொழியாக்கும் அறிக்கையை வெளியிட்டது ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு.

இரண்டாவதாக வெளியான அறிக்கை மீண்டும் இந்தி எதிர்ப்பு நெருப்பைப் பற்றவைத்தது. ஜூலை 5-ல் எதிர்க்கட்சிகள் பேரணி வெற்றிகரமாக நடத்தப்பட்டால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதனால் ஃபட்னாவிஸ் அரசாணைகளை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாணைகள் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *