Sorting by

×

`NO சொன்ன சீமான்’ – தவாக உள்ளிட்ட தமிழ்தேசிய இயக்கங்களை இழுக்கும் அ.தி.மு.க?

2026 சட்டமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கும் அ.தி.மு.க, தமிழ்தேசிய இயக்கங்களை கூட்டணிக்குள் கொண்டுவரத் திட்டமிடுவதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தொடங்கிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதாம் அ.தி.மு.க தலைமை.

வேல்முருகன்

நம்மிடம் பேசியவர்கள் “2016 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அரசியலுக்கு என்டரி கொடுத்த நாம் தமிழர் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்மூலம் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக வளர்ந்து நிற்கிறது. தி.மு.க எதிர்ப்பு அரசியலை கூர்மையாகக் கொண்டிருந்தாலும் அ.தி.மு.க-வின் வாக்குவங்கியை அசைத்துப் பார்க்கிறார் சீமான். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானித்தது அக்கட்சி. இதனால் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு எப்படியாவது நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர விரும்பினாலும் அது கைகூடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு வராது என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதால் பிற தமிழ்தேசிய இயக்கங்களை இழுக்கும் முடிவில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க” என்றனர்.

சீமான்

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர் “தி.மு.க எதிர்ப்புப் புள்ளியில் மிக உறுதியாக சீமான் இருப்பதால், அ.தி.மு.க கூட்டணிக்கு அவர் வந்தால் சுமார் 5 சதவிகித வாக்குகள் கைக்கொடுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. கூட்டணிக்கு வந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என சீமான் திட்டவட்டமாக சொல்லிவிட்டதால், பிற தமிழ்தேசிய இயக்கங்களுக்கு குறி வைத்திருக்கிறோம். குறிப்பாக தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க ஆட்சிமீது கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணிக்கு வந்தால் தமிழ்தேசிய மற்றும் வன்னியர் சமூக வாக்குகளும் கைக்கொடுக்கும். அதேபோல நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தொடங்கிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை வலுப்படுத்தி ஒரேசேர இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற திட்டமும் இருக்கிறது” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்க நிர்வாகி ஒருவர் பேசும்போது “நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியறுகிறவர்கள் அனைவரும் எங்கள் இயக்கத்தில் ஐக்கியமாகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மேலும் பலர் நிச்சயம் இணைவார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியோடு பயணிக்க முடிவெடுத்ததனால்தான் கடந்த நவம்பர் 27-ம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய மாவீரர் நாள் கூட்டத்துக்கு தலைமை வகிக்க வேல்முருகனை அழைத்தோம்.

தேர்தல் அரசியலில் ஈடுபடுவதாக முடிவெடுத்துவிட்டாலும் த.வா.க இருக்குமிடத்தில்தான் இருப்போம். தி.மு.க கூட்டணி நாங்கள் இருந்தால் எங்கள் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாவதால் அ.தி.மு.க கூட்டணியே சரியாக இருக்குமென கருதுகிறோம். அரசியல் சூழலை பொறுத்து எங்கள் இயக்கத்தை வாழ்வுரிமைக் கட்சியோடு இணைப்போம்” என்றனர்

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் புலேந்திரன் முருகானந்தம் “தமிழர் நலன், தமிழ்தேசியம் என்பதை வெற்று வார்த்தைகளாக இல்லாமல் கொள்கை பயணம் மேற்கொள்பவர் எங்கள் அண்ணன் வேல்முருகன். தமிழ்நாடெங்கும் அரசியல் புரிதல் கொண்ட இளைஞர்களை பெருமளவில் கொண்டிருப்பதால் எங்களை கூட்டணிக்குள் கொண்டுவர அ.தி.மு.க விரும்புவது ஒன்றும் ஆச்சரியமில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் இருப்போம் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என்றார்.

அ.தி.மு.க-வின் இந்த ப்ளான் வொர்க்அவுட்டானால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும், தி.மு.க கூட்டணியிலிருந்து வேல்முருகனை தூக்கிவிட்டால் வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் தி.மு.க-வுக்கு போகாது என அ.தி.மு.க-வினரும் அணுமானிக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *