Sorting by

×

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில்  இறங்கியுள்ளது தி.மு.க.

கடந்த ஒரு வாரமாக   நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது. மற்றொருபுறம், தி.மு.க கூட்டணியில் இழுபறியாக இருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடனான  தொகுதி பங்கீட்டையும் தி.மு.க தலைமை ஒரே நாளில் இறுதி செய்துவிட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு இடங்கள் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தி.மு.க வைத்த கோரிக்கையால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இதனால் தி.மு.க பிற கூட்டணிக் கட்சிகளுடன் கிட்டதட்ட தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் தி.மு.க தரப்பு முடிவு செய்துவிடும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நாற்பது தொகுதிகளின் பட்டியலை தி.மு.க தரப்பிடம்  கொடுத்துள்ளது. அதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை இரண்டு நாட்களுக்குள் அளித்துவிடும் என தெரிகிறது.

இந்த வார இறுதிக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்ய வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளிடம் முதல்வர் சொல்லியுள்ளார். வேலு, நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளிடம் விரைவில் தொகுதியை இறுதி செய்ய இருக்கிறார்கள். கூ்ட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதியான பிறகு முதல்வர் பிரசாரத்தை துவக்க உள்ளார் என்கிறார்கள் தி.மு.கவினர்.

இதுகுறித்து தி.மு.க மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசும் போது “தொகுதிகள் முடிவான பிறகே முதல்வர் பிரசாரத்திற்கு கிளம்ப உள்ளார். மாவட்டத்திற்கு ஒரு இடம் என்கிற ரீதியில் பிரசாரம் திட்டமிடப்பட உள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஏப்ரல் 2-ம் தேதி அன்று காலை தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்று மாலை சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று, ஏப்ரல் 3-ம் தேதி தஞ்சாவூர் அல்லது திருவாரூரிலிருந்து முதல்வர் பிரசாரத்தை துவக்கும் வகையில் தி.மு.க வின் வியூகும்  உள்ளது” என்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவுக்கு அதன் தேர்தல் அறிக்கை பெரும் பலமாக அமையும். அதனாலே தி.மு.க-வின் தேர்தல் கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான் என கருணாநிதி குறிப்பிடுவார்.அந்த வகையில், இந்த முறையும் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையே பேசுபொருளாக இருக்கும் என்கிற பேச்சு எழுந்துள்ளது. 

இதுகுறித்து தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் “கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கடந்த ஒரு மாதமாக தீவிரமாக  தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வர தேர்தல் அறிக்கை முக்கிய காரணம். அதே போல் இந்த முறையும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற உள்ளது. குறிப்பாக எல்.இ.டி-டி.வியை இலவசமாக அறிவிக்கும் திட்டம் இப்போது உள்ளது. 

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

அதே போல் இலவச முழு உடல் பரிசோதனை திட்டம், இளைஞர்களுக்கென பிரதேயக அறிவிப்புகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே,முதல்வர் பிரசாரத்திற்கு கிளம்ப உள்ளார். தேர்தல் அறிக்கையே பிரசாரத்தில் மையப்பொருளாக இருக்க வேண்டும் என்கிற மூடில் முதல்வர் இருக்கிறார்” என்கிறார்கள். 

“முதல் நாள் தேர்தல் அறிக்கை… மறுநாள் தேர்தல் பிரசாரம்” என்று ப்ளானில் இருக்கிறது தி.மு.க தலைமை. 

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *