மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் அவரது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். இந்த மரணத்தில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அஜித் பவார் குடும்பத்தினரும் மீள்வதற்குள் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் கட்சியை கைப்பற்றும் விதமாக தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் கட்சியின் செயல் தலைவரான பிரபுல் பட்டேலுக்கு கட்சியில் அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக கடிதம் அனுப்பி இருந்தனர்.
ஆனால் அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் கடந்த மாதம் கட்சியின் தலைவரான பிறகு தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் அஜித் பவார் இறந்த பிறகு கட்சி தொடர்பாக வந்த அனைத்து கடிதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கட்சியில் யாருக்கு என்ன பதவி என்பது தொடர்பாக சுனேத்ரா பவார் குறிப்பிட்டுள்ளார்.

அதில் கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்த பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோருக்கு கட்சியில் எந்த வித பதவியும் கொடுக்கப்படவில்லை. மொத்தம் 14 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகள் பட்டியலை சுனேத்ரா பவார் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்து இருக்கிறார்.
அதில் தலைவர் பதவிக்கு தனது பெயரையும், பொருளாளர் பதவிக்கு சிவாஜிராவ் பெயரையும் மட்டும் குறிப்பிட்டுள்ளார். மற்ற யாருக்கும் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. பிரபுல் படேல், சுனில் தட்கரே, சகன் புஜ்பால் மற்றும் ஜெய் பவார் உட்பட மீதமுள்ள 12 உறுப்பினர்களுக்கு பதவி எதுவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
அஜித் பவார் மகன்கள் இரண்டு பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. சமீப காலம் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது குறித்து எந்த வித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று கூறி வந்த சுனில் தட்கரே இப்போது அஜித் பவார் இருந்த போது இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இரு அணிகளும் இணைவதில் எனக்கு எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், ஆனால் கட்சியில் இவ்விவகாரத்தில் கருத்துவேறுபாடு இருந்தது என்றும் சுனில் தட்கரே குறிப்பிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
