திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன். அப்போது, அன்பழகன் பிரியப்பட்டு `ஆனியன் ஊத்தாப்பம்’ கேட்டு, அதை வாங்கிக்கொடுத்ததையும் மலரும் நினைவுகளாகப் பகிர்கிறார் ஞானவேலன்.

இந்த நிலையில்தான் `உடன்பிறப்பே வா..’ நிகழ்ச்சி மூலம் ஸ்டாலினுடன் ஒன் டூ ஒன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தளபதி அறிவாலயத்தின் புகைப்படத்தைக் காட்டி பத்து ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக செய்துவரும் பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஞானவேலன். தற்போது, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய இருத் தொகுதிகளுக்குமே விருப்ப மனு வழங்கிவிட்டு, தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறார்.
ஞானவேலனுக்காக அவரின் மனைவியும், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவருமான பிரியதர்ஷினி ஞானவேலனும் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் விண்ணப்பம் வழங்கியிருக்கிறார். வாணியம்பாடி தொகுதி தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. `கூட்டணிக்குத் தாரைவார்ப்பதால் தி.மு.க தொடர் தோல்வியைச் சந்திக்கிறது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டு தொகுதியைக் கைப்பற்ற வேண்டும்’ எனக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
