திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு கூட்டுறவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதையடுத்து இன்று இந்தக் கல்லுரியின் வகுப்புகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “குடும்பங்களுக்கு 10,000 உரிமைத்தொகை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அள்ளி விடுகிறார். எடப்பாடி பழனிசாமி பொருளாதார நிபுணர் கிடையாது. ஏதோ காரணத்தினால் முதலமைச்சராக வந்தவர். அடிப்படையில் பெரிய அரசியல் தலைவரும் கிடையாது, அவரிடம் நிர்வாகத் திறனும் இல்லை.
இதனால் 10,000 என்பது அள்ளி விடுவது போல்தான் உள்ளது. சொல்வதை அவர் செய்யப் போவதில்லை. அடுத்து அவர் ஆட்சிக்கு வர மாட்டார் என்பதால், என்ன வேண்டுமானாலும் கூறலாம். மக்களின் ஆதரவை அதிமுக இழந்துவிட்டது. அதிமுக சுக்குநூறாக போய்விட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு சேர்ந்த பின் தற்போது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பாஜக-வுக்கு அடிமையாகத்தான் அதிமுக இருந்து வருகின்றது. பாஜக தான் அதிமுக-வை வழிநடத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி சுயமாக எதுவும் கூறுவதில்லை. பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் அதிமுக முழுவதுமாக பலவீனம் ஆகிவிட்டது. தேர்தலில் நிற்கக்கூட ஆட்கள் வர மாட்டார்கள். மதுரையிலும் பலவீனம் ஆகிவிட்டது. திண்டுக்கல்லில் ஒன்றும் இல்லை.

தென் மாவட்டத்திலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வர வாய்ப்புள்ளது. ஐந்தாண்டு காலத்தில் அடிப்படை வசதிகள் அனைத்து கிராமங்களிலும் செய்து கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நீடித்தார் என்றால், அதிமுக ஒரு சதவிகிதத்துக்கு வந்துவிடும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
