அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அநாகரிக பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (மார்ச்.4) பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”நாம் எவ்வளவு கண்ணியத்தோடு நடந்து கொள்கிறோம். பிரசாரத்திற்கு வந்தால் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச வேண்டும்.
அதை விட்டுவிட்டு குடும்பத்தை இழுத்து கண்ணியக் குறைவாக பேசினால், போளூர் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உங்களை அடித்து விரட்டுவார்கள்.
இதில் மாற்றுக் கருத்து கிடையாது. உங்களைப் பற்றி நாங்கள் பேசியது கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்?
இங்கு தேர்தல் வருவது எதற்காக? எல்லா குடும்பத்தையும் திட்டுவதற்காகவா தேர்தல் வருகிறது? உங்களால் முடிந்தால் வந்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
லஞ்ச வழக்குகள், ஊழல் வழக்குகளை வைத்துக்கொண்டு டெல்லிக்கு போய் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறீர்கள்.
உங்களுக்கு பேச எந்த தகுதியும் இல்லை, எந்த தார்மீக உரிமையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை. எல்லோரும் ஒரே அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி என்று கேப்டன் சொல்லி எங்களை வழிநடத்தினார்.

அதனால், இன்று சாதி கட்சியை வைத்துக்கொண்டு நீங்கள் தேவையில்லாமல் சாதி மற்றும் குடும்பத்தை பற்றி பேசினால், அப்புறம் நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்கள் முகத்தை எங்கே வைத்துகொள்வீர்கள் என்று தெரியாது.
இருவரும் இச்செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மரியாதையுடன் தெரிவிக்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமியையும், அன்புமணியையும் பிரேமலதா விஜயகாந்த் சாடியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
