Sorting by

×

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைத்த விஷயத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என நேற்று பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி விவகாரத்தையும் பார்த்து விடலாமா?

அதிமுக
ADMK

ஒரே சிட்டிங்கில் ஓவர்!

‘பாஜக 80 சீட் கேக்குறாங்களாம்’ எனத் தொடங்கி, பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு ஓடுறார், அங்க‌ எழுதிக் கொடுக்கிறதை இங்க வாசிக்கிறார், பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைமைதான் நாளை இவருக்கு… என்றெல்லாம் ஏகப்பட்ட கேலி கிண்டல்களை அதிமுகவை நோக்கியும் எடப்பாடி பழனிசாமியை நோக்கியும் வீசினார்கள் எதிரணியினர்.

ஒரே செய்தியாளர் சந்திப்பில் அனைத்து முக்கியக் கட்சிகளுடனான உடன்படிக்கையையும் இறுதி செய்து அறிவித்து விட்டார் அவர்.

கூடவே ஜெயலலிதா ஸ்டைலில் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதியையும் முதல் கட்சியாக வெளியிட்டு விட்டது அஇஅதிமுக.

வழக்கமாக நிற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒட்டியே இந்தத் தேர்தலையும் எதிர் கொள்கிறது இரட்டை இலை.

‘காங்கிரஸை தவெக இழுக்கப் போகிறது’ என்கிற பேச்சு எப்படி திமுக கூட்டணியைச் சலசலப்புக்கு உள்ளாக்கியதோ அதேபோல, ‘தவெக தே.ஜ.கூ. பக்கம் வருகிறது, விஜய் துணை முதல்வர், எனவே அதிமுகவின் முக்கியத்துவம் குறைந்து விடும்’ என்பன போன்ற பேச்சுகள் இந்தப் பக்கமும் பரபரப்பை உண்டாக்கியது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில், ‘எதற்குக் கேட்டார்களெனத் தெரியவில்லை, திடீரென நிர்வாகிகளைக் கூப்பிட்டு கூட்டணிக்குப் போகலாமா’ என்கிற ஒரு கேள்வியைக் கேட்டது தவெக.

ஆனால், ‘கூட்டணிக்குத் தலைமை வகிப்பது அதிமுக, நாங்கள் யாரிடமும் பேசவில்லை’ என ஒரே பதிலில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

பாஜகவுக்குக் கடந்த தேர்தலை விட 7 தொகுதிகள் கூடுதல்தான்.

காங்கிரஸில் மாணிக் தாகூர், வேலுசாமி ஆகியோர் எழுப்பிய கலகக்குரல்கள் போல் பாஜக தரப்பிலிருந்து ஆட்சியில் பங்கு போன்ற எந்தக் குரல்களும் எழும்பாததற்கு இந்தக் கூடுதல் எண்ணிக்கை காரணமாக இருக்கலாம்.

பாஜக, அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேருடனும் மனக்கசப்பு இல்லாதபடி கூட்டணியை அமைத்து விட்டதை அதிமுகவின் பிளஸ் எனச் சொல்லலாம்.

மைனஸ் எனப் பார்த்தால் கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது.

மோடி - அமித்ஷா
மோடி – அமித்ஷா

சீட் ஓ.கே. ஆனா?

எதைத் தின்னா பித்தம் தெளியும் என்பது போல என்ன செய்தால் தமிழ்நாட்டில் வெல்லலாம் எனத் தொலைநோக்குத் திட்டம் போட்டு வேலை செய்து வருகிற பாஜகவுக்குக் கடந்த தேர்தலை விட ஏழு தொகுதிகள் கூடுதலாகக் கிடைத்த வகையில் லாபம்தான்.

அதேநேரம் பழனிசாமியை ஹேண்டில் செய்வது அல்லது வழிக்குக் கொண்டு வருவது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கே சிரமமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது இந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தை நாட்கள்.

‘நாங்க நாலு பேரு பேசிட்டிருக்கோம். அமித் ஷா சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் சம்மதிக்க மாட்டேங்கிறார் பழனிசாமி. எழுந்து போயிட்டார் அமித் ஷா’ எனப் பிரஸ் மீட்டில் பன்னீர் நொந்து போய் பேசியது நினைவிருக்கலாம்.

எனவே, ‘நாம நிக்கிற இடங்களில் ஜெயிக்கப் பாருங்க, மத்ததைப் பிறகு பார்க்கலாம்’ என இப்போதைக்கு அந்த வேலையில் இறங்கி விட்டதாகச் சொல்கிறார்கள் பாஜக காரிய கர்த்தாக்கள்.

Anbumani ramadoss

அந்த ஒரு சீட்டையும் கூட்டிக்கோங்க!

உட்கட்சியில் பூசல் உச்சத்தில் போய்க் கோண்டிருக்கிற நிலையில் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதையே, ‘பாட்டாளி மக்கள் கட்சி தன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என உலகத்துக்குச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு என எடுத்துக் கொண்டார் போல அன்புமணி.

எனவேதான், ‘கடந்த தேர்தலை விட இந்த முறை குறைவான சீட்டுகள் ஏன்’ என தெரிந்து கொண்டே வாயைப் பிடுங்கிய செய்தியாளர்களிடம், ‘ஆமாங்க ஒரு ராஜ்ய சபா சீட் தந்திருக்காங்களே, அது எத்தனை எம்.எல்.ஏ சீட்டுக்குச் சமம் தெரியுமா’ எனக் கொஞ்சம் கடுப்புடனயே பதில் தந்தார்.

சின்னம், அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் எந்த நேரத்தில் என்ன வழக்கு வருமெனத் தெரியாத சூழலே நிலவி வருவதால், இந்த நேரத்தில் ‘தொகுதி குறையா இருக்கு’ என்று பேசவெல்லாம் தயாராக இல்லை அவர்.

தினகரன்
தினகரன்

குக்குருக்குத் தாராளம்.. யாருக்கு செக்?

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு லக் என்றால் இந்தப் பக்கம் அமமுகவுக்கு அந்த அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘என்னது டி.டி.விக்கு 11 சீட்டா’ என அதிமுகவில் சிலரே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்களாம். கடந்த தேர்தலில் அவர் பிரித்த ஒட்டுகளை மனதில் வைத்தும் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுகள் சசிகலா, பன்னீர் உள்ளிட்டோர் பக்கம் சென்று விடாதபடி தடுக்கவுமே தாராளம் காட்டியிருக்கிறாராம் பழனிசாமி.

இந்தக் கட்சிகள் தவிர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5, ஜான் பாண்டியனுக்கு 1 பூவை ஜெகன் மூர்த்திக்கு 1 ஆகிய சீட்டுகள் வழக்கமான கோட்டா என்றுதான் சொல்ல வேண்டும்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *