கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அந்த வழக்கில் உழைத்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 82 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வயதானவர்கள் வீட்டில் தனியாக வாழ்வதற்கு கூட பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
சட்டவிரோத மது, போதை விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையை தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. திராவிட மாடல் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வியடைந்த அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் மகளிருக்கான வாக்குறுதிகளை வரவேற்கிறேன். வாக்குறுதிகள் நல்லதாக இருக்கலாம். ஆனால் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.
விஜய் தனித்து ஆட்சி அமைப்பார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். விஜய் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவருக்கு வாய்ப்பு இல்லை ராஜா என்று தான் சொல்ல வேண்டும். நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டேன். அரசியல் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக.

தனி மனித வாழ்க்கையில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் என்கிற கலாசாரத்தை திமுக உருவாக்கியுள்ளது. ஸ்டாலினுக்கு கண்ணை மூடி திறந்தாலே பாஜக தான் கண்ணுக்கு தெரிகிறது. அதனால் எங்களை விமர்சிக்கிறார்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
