தவெக-வின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடந்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சில ஜாலியான ரகளையான மொமென்ட்களும் நடந்திருந்தது. குறிப்பாக, ஒரே கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்துக்கு ‘6’ செல்லப்பெயர்கள் வழங்கப்பட்டதால், அவரே திக்குமுக்காடிப் போனார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் தவெக-வில் இணைந்த ஜெகதீச பாண்டியன் மைக் பிடிக்கையில், “கழகத்துக்காகச் சுற்றிச் சுழன்று உழைத்துக் கொண்டிருக்கும் ‘ஆண் தாய்’ பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்” எனப் புகழ்ந்தார். ஆனந்தை இப்படி அழைப்பதை ஜெகதீச பாண்டியன் பழக்கமாக மாற்றி வருகிறார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு பெரம்பூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்திலும் அப்படித்தான் அழைத்திருந்தார். கன்னங்கள் சிவக்க புஸ்ஸி ஆனந்தும் அந்தப் பட்டத்தை ஆமோதித்துக் கொள்கிறார். ‘ஆண்தாய்ங்றதுனாலதான் போஸ்டர்ல எப்பவும் என் படத்துக்கு கீழ உங்க படத்தைப் போடுறோம். அம்மா படத்துக்கு கீழ உங்க படத்தை போடுறதுதான வழக்கம்…புரிஞ்சுக்கோங்க செங்க்ஸ் ப்ரோ..’ என செங்கோட்டையனிடம் அந்த சிரிப்பின் வழியே ஒரு மெசேஜையும் நைசாக கடத்திவிடுகிறார்.

செங்கோட்டையனுக்கும் எதார்த்தம் புரிந்திருக்கிறது. அதனால் அவரும் இப்போதெல்லாம் ஆனந்துக்கு ஐஸ் வைக்க தவறுவதில்லை. “அவர் புஸ்ஸி ஆனந்தா இல்லை…’பிஸி’ ஆனந்தா என்றே தெரியவில்லை” என மீண்டும் ஆனந்தின் கன்னங்களை சிவக்க வைத்தார். அடுத்ததாக, ‘நான் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியிருக்கிறேன். அம்மாவுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இவர் எங்கிருந்து பணியாற்றுகிறார் என்றே தெரியாத அளவுக்கு பணியாற்றுகிறார்..’ என்றார். கன்னங்கள் சிவந்திருந்த ஆனந்த் ‘இப்போ பாராட்டுறீங்களா…திட்டுறீங்களா…’ என்பதுபோல திடீர் குழப்பமடைந்தார்.
எதுகை மோனையில் உறைய வைக்கும் ராஜ்மோகன் மைக்கைப் பிடித்தார். ‘எங்களை ஆளாக்கி அழகு பார்க்கும் ஆண் தாயே..’ என்றவுடன் ஆனந்த் கொஞ்சம் நிமிர்ந்து உட்காந்து புகழுரைகளை கேட்ச் பிடிக்க தயாரானார். ஆனால், ட்விஸ்ட் கொடுத்த ராஜ்மோகன் ‘மிஸ்டர் ஆதவ் அர்ஜூனா யார் இந்த மனிதர்?’ என ஒரு பாட்டே பாட ஆரம்பித்தார்.

மிஸ்டர் ஆதவ் அர்ஜூனா
யார் இந்த மனிதன்?
தவழும் வயதில் தாயை இழந்த மகன்
வளரும் வயதில் தந்தையை இழந்த கொடுமை
வாலிப வயதில் வசந்தங்களை இழந்த மாணவன்
இழக்கக் கூடாத வயதில் அத்தனையும் இழந்தார்.
ஆனால், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத சிங்கம்.
தவறான பாதைக்குச் செல்லாமல் பகுத்தறிவு பாதைக்குச் சென்று, மார்க்சிய விழுமியங்களை கற்றறிந்து விளையாட்டு மைதானங்களுக்குள் நுழைந்து மாவட்ட… மாநிலம்… தேசமென வென்று, தேசிய கீதம் பாடுகையில் இந்தியாவுக்காக நின்ற விளையாட்டு வீரரை கொண்டிருக்கும் கட்சி தவெக.
நான் சாப்பிடும் போது எல்லாவற்றையும் சாப்பிடுவேன். ஆனால், அவர் வெறும் முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார். ஏன் என்று கேட்பேன். ‘பிரதர் நீங்கள் வயதிலிருந்து எல்லாவற்றையும் கடித்து சுவைத்து சாப்பிட்டிருப்பீர்கள். நான் சத்துணவு சாப்பிட்டு இந்த இடத்துக்கு வந்தவன்’ என்றார்.
விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லும் ஆதவ் எங்கே? விவசாய பட்ஜெட் வாசிக்கும் போது கொட்டாவி விட்டு தூங்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் எங்கே? உங்களை மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்ததால் ஒரே ஆண்டில் துணை முதல்வர் ஆனவர் இல்லை இவர். தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் ஒவ்வொரு நொடியும் உழைத்து உழைத்து வந்து நிற்பவர்தான் ஆதவ்’ என மூச்சு முட்ட ஆதவே கூச்சப்படும் அளவுக்கு ஜல்லியடிக்க, ஆனந்தும் சங்கடப்பட்டு சிரித்துக் கொண்டார்.

அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் எதிர்பார்க்கும் பாவனை கொண்ட ஒரு பெண்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் தன் பங்குக்கு ராஜ்மோகனோடு போட்டிப் போட்டு எதுகை மோனையில் பின்னி எடுத்தார். ‘இயக்கத்தின் இதயத்துடிப்பு’ ‘தளபதியின் நிழல்’ ‘நிர்வாகத்தூண்’ ‘செயல்புயல்’ என ஆனந்தையே வெட்கப்பட வைத்தார். ஆனால், எல்லாமே தவெக நிர்வாகிகள் போஸ்டரில் அடித்து வைத்திருந்ததின் காப்பி!
வில்லிவாக்கம் தொகுதிக்கென சிறப்பு வியூகம் எதையும் கற்றுக்கொடுக்கப் போகிறாரோ என நிர்வாகிகள் ஆர்வமாக காத்திருக்க, ‘மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தொகுதியில் 30 ஆண்டுகளாக இருக்கிறார். அதனால் தொகுதி நம்முடைய கோட்டை’ என ஒரே போடாக போட்டுவிட்டு கிளம்பினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
