கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் – ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன. கேரளாவில் உடல் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்தவர் என ஆலின் ஷெரின் ஆபிரகாமை மக்கள் கொண்டாடினர். அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அரசு மரியாதையுடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆலின் ஷெரின் ஆபிரகாமின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உடல் உறுப்பு தானம் சிறப்பு மையத்துக்கு ஆலின் ஷெரின் ஆபிரகாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், “ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்” என பிரபல எழுத்தாளர் எதிரன் கதிரவன் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மலையாள எழுத்தாளர் எதிரன் கதிரவன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஆலின் என்ற குழந்தையை கொண்டாடுவதன் மூலம் நமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மிகவும் கொடுமையானதும், மோசமான நடவடிக்கையும் ஆகும். குழந்தைகளுக்கான பேபி சீட் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லையா? நம்முடைய அலட்சியம் அந்த குழந்தையை கொன்றுவிட்டது என்பதை உணர இங்கு யாருமே இல்லையா? அந்த குழந்தையுடன் பயணித்த தாய் உள்ளிட்டவருக்கு பெரிய அளவு காயம் இல்லை. கவனமாக இருந்திருந்தால் ஆலின் ஷெரினை மரணமடையாமல் பார்த்திருக்கலாம்.
இதே சம்பவம் வேறு நாடுகளில் நடந்திருந்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பாலா என்ற இடத்தில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஒரு சிறிய குழந்தையை மடியில் அமரவைத்து ஒருவர் கார் ஓட்டிய காட்சியை நேற்று பார்த்தேன். ஒரு சிறு நிகழ்வால் ஸ்டீயரிங் குழந்தையின் தலையில் இடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும். பேச்சுகூட வராத குழந்தைகளை வைத்து வேடிக்கை காட்டும் இவர்கள் பெற்றோர்கள்தானா? ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
