Sorting by

×

அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகளையே அ.தி.மு.க தங்கள் தலையில் கட்டிவிட்டதாகப் புலம்பித் தீர்க்கிறார்கள் பா.ஜ.க-வினர். குறிப்பாக, ஆறு அமைச்சர் தொகுதிகளை பா.ஜ.க-விடம் அ.தி.மு.க தள்ளிவிட்டிருப்பது, கமலாலயத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த மார்ச் 26-ம் தேதி சென்னை வந்திருந்த பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ், தொகுதிப் பங்கீட்டில் தன்னுடைய வருத்தத்தை சற்று காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

பி.எல்.சந்தோஷ்

அதுதொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள், “பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில், கோவை வடக்கு, மொடக்குறிச்சி, அவிநாசி, நாகர்கோவில் தொகுதிகள் மட்டுமே கடந்த தேர்தலில் ஜெயித்தவை. மற்ற 23 தொகுதிகளும் தே.ஜ கூட்டணி தோற்ற தொகுதிகள். அதையெல்லாம் எங்கள் தலையில் கட்டிவிட்டது அ.தி.மு.க. அதில், பி.எல்.சந்தோஷ் ரொம்பவும் அப்செட். கமலாலயத்தின் அரங்கராஜன் அரங்கில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடும்போது, ‘இதுதான் சீட் பங்கீடா… நமக்கு பலமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டாமா… திருவாரூரில் தி.மு.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட நம்மிடம் வலுவான ஆளே இல்லை. அதற்குப் பதிலாக கும்பகோணத்தைப் பெற்றிருக்கலாமே? சென்னையிலும் கோவையிலும் நாம் வலுவாக இருக்கிறோம். அங்கேயெல்லாம் ஒரேயொரு தொகுதிதான் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் என்ன தொகுதிப் பங்கீடு பேசுனீர்கள்?’ என்று கொதித்துப் பேசினார். அருகிலிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் எதுவுமே பேச முடியவில்லை.

கூட்டத்தை முடித்துக்கொண்டு நயினாரின் அறைக்கு வந்த பின்னரும் பி.எல்.சந்தோஷின் கோபம் தணியவில்லை. கட்சி மேலிட பொறுப்பாளர்களான அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டியை அழைத்து, ‘கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லையென்றால், நீங்களெல்லாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்…’ என்று பொருமித் தள்ளிவிட்டார். அப்போது நயினார் தன்னுடைய அறைக்கு வரவும், அருகிலிருந்த அணிகளின் பிரிவு மாநில அமைப்பாளர் கே.டி.ராகவனிடமும் பொருளாளர் சேகரிடமும், ‘மாநிலத் தலைவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். அவரைப் பார்ப்பதற்கு நிறைய பேர் காத்திருப்பார்கள். இங்கு நாம் இருந்தால் அவருக்கு சிரமமாக இருக்கும். நாம் விமானநிலையத்துக்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம்’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அவர்களுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார் பி.எல்.சந்தோஷ்.

நயினார் நாகேந்திரன்

சென்னையில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளாவது பெற்றுவிட வேண்டும் என்பதுதான் சந்தோஷின் திட்டமாக இருந்தது. கட்சியில் தீவிரமாக களப்பணியாற்றும் எஸ்.ஜி.சூரியாவுக்கு வேளச்சேரி தொகுதியையும் கே.டி.ராகவனுக்கு செங்கல்பட்டு தொகுதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பது சந்தோஷின் விருப்பம். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, பா.ஜ.க-வுக்குச் சாதகமான தொகுதிகளும் கிடைக்கவில்லை என்பது அவரை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. இதனால், ‘டெல்லியில் என்ன போட்டுக்கொடுக்கப் போகிறாரோ…’ என்று நயினார் தரப்பினர் ஆடிப் போயிருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

பி.எல்.சந்தோஷின் கடுகடுப்பைத் தொடர்ந்து, சில தொகுதிகளை மாற்றித் தரும்படி அ.தி.மு.க-விடம் கோரியிருக்கிறது பா.ஜ.க தலைமை. கந்தர்வக்கோட்டைக்குப் பதிலாக ஆலங்குடியையும் தஞ்சாவூருக்குப் பதிலாக வேறொரு தொகுதியையும் கேட்டிருக்கிறார்கள். அதேபோல, தலைநகரில் கூடுதலாக ஒரு தொகுதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது பா.ஜ.க. ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜபாளையம் தொகுதியையும் மாற்றி வழங்கும்படி ராஜேந்திர பாலாஜியும் நெருக்கடி கொடுப்பதால், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *