திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர்.

இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக தி.மு.க-வினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கறுப்பு மை கொண்டு அழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ‘உடனடியாக அனைவருக்கும் புரியும் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். துரோகம் இழைப்போர் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள். டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு Out Of Control’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சூழலில், இதற்கு எதிர்ப்பு அதிகமாகவும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
