Sorting by

×

ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஈரான் போரும் தொடங்க, இந்த இறங்குமுகம் தொடர்கதையாகி வருகிறது.

இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94-ஐ தாண்டி இந்திய ரூபாயின் மதிப்பு சென்றுவிட்டது.

இந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியுமா என்று முன்னாள் வங்கியாளர் தாமஸ் ஃபிரான்கோவிடம் பேசினோம்.

“இந்திய ரூபாய் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கிதான் தலையிட வேண்டும்.

பொதுவாக ஒரு நாணயத்தில் டிமாண்ட் அதிகரித்து சப்ளைக் குறைவாக இருந்தால் அந்த நாணயத்தின் மதிப்பு மிகவும் உயரும்.

இப்போது மேற்கு ஆசிய நாட்டில் நடந்து வரும் போரால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

முன்னாள் வங்கியாளர் தாமஸ் பிரான்கோ
முன்னாள் வங்கியாளர் தாமஸ் பிரான்கோ

சர்வதேச சந்தையில் இருந்து இந்தக் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்க டாலர்கள் அவசியம். இந்த இடத்தில் இந்தியாவிற்கு அமெரிக்க டாலரின் தேவை இருக்கிறது.

ஆனால், அந்தளவிற்கு சப்ளை இருக்கிறதா என்று கேட்டால், அது இல்லை. அதனால், அமெரிக்க டாலரை இந்திய ரூபாய் கொடுத்துதான் இந்திய ரிசர்வ் வங்கி வாங்க முடியும்.

இன்னொரு பக்கம், இந்தப் போர் காலத்தில் பொதுவாகவே அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக உள்ளது.

இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.

இந்திய ரூபாய் மட்டுமல்ல

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு வழிதான் உள்ளது.

அது தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைச் சந்தையில் விற்பது.

இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலரை விற்கும்போது, சந்தையில் அதன் சப்ளை அதிகமாக இருக்கும்.

அதனால், அதன் தேவை குறையும்… அதன் மதிப்பும் குறையும்.

இந்திய ரிசர்வ் வங்கி இந்தச் செயலைச் செய்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வதைத் தடுக்க எவ்வளவோ செய்துவிட்டது. ஆனால், எதுவும் கைக்கொடுக்கவில்லை.

ஆக, இந்திய ரிசர்வ் வங்கி தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டது.

இதே நேரத்தில், பெரியளவில் இந்திய ரிசர்வ் வங்கியால் அமெரிக்க டாலர்களைச் சந்தையில் இறக்கிவிட முடியாது. காரணம், அவை வர்த்தகத்திற்கு மிகத் தேவை.

உலக அளவில் இப்போது இந்திய ரூபாய் மட்டும் சரியவில்லை. ஈரான் போரால் பல நாடுகளின் நாணயங்கள் இந்த இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

விளைவுகள்…

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்வது ஏற்றுமதியாளர்களுக்கு ப்ளஸ். ஏனெனில், அவர்களுக்கு வரவேண்டிய பேமென்ட் டாலர்களில் வரும். அதை இங்கே இந்திய ரூபாயாக மாற்றும் போது, அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

ஆனால், இறக்குமதியாளர்களுக்கோ வேறு கதை. அவர்கள் அதிக தொகையைக் கொடுத்து அமெரிக்க டாலர்கள் வாங்கி இறக்குமதி செய்ய வேண்டும்.

இதனால், சத்தமில்லாமல், இந்தியாவில் பணவீக்கம், வேலை இழப்பு ஆகியவை நடக்கும்.

மத்திய அரசு தான்

இதைச் சரிசெய்ய மத்திய அரசு தான் தலையிட வேண்டும். இறக்குமதியாளர்களுக்குச் சில சலுகைகள் செய்து தர வேண்டும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதித்த போது, சுங்க வரிக் குறைப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை போன்றவற்றின் மூலம் உதவி செய்தது மத்திய அரசு.

இந்த மாதிரியான நடவடிக்கைகளை இப்போது மத்திய அரசு கையிலெடுக்க வேண்டும்.

அடுத்ததாக, வெளிநாட்டு சந்தைகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவிற்குள்ளேயே சந்தையை விரிவுப்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாக, ஏற்றுமதிகளுக்கு உதவ இந்திய ரிசர்வ் வங்கியே பெருமளவில் இந்திய ரூபாய் சரிவைக் கட்டுப்படுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்”

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *