மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வசித்து வரும் அவரின் அண்ணன் மகளான ஜெ.தீபாவும் அங்கு ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கடந்த இரு ஆண்டுகளாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா பிறந்த மற்றும் நினைவு தினங்களின் போது மரியாதை செலுத்தி வரும் தீபாவைச் சந்தித்து சில கேள்விகளை வைத்தோம்.

‘’தமிழகத்தில் தேர்தல் என்றால் திமுக அதிமுக இடையேதான் என்பதுதான் வரலாறு. இப்போது எங்களுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்கிறார் புதிதாக வந்திருக்கும் விஜய். இது பத்தி என்ன சொல்றீங்க?
‘’அவரை நாம குறை சொல்ல முடியாது. அவர் ஏன் அப்படிச் சொல்றார்னு யோசிக்கணும். கட்சியின் இன்றைய நிலை சரியில்லாமக் கிடக்கப் போய்த்தான் அவர் அந்த மாதிரி பேசுறார். கட்சி ரெண்டா, மூணா, ஆகிடுச்சுங்கிற ஒரு தோற்றம் மக்கள்கிட்ட பரவியிருக்கு. அந்தளவு கட்சியை நாசம் பண்ணிட்டாங்க. இந்த விஷயத்துல இ.பி.எஸ். ஒ.பி.எஸ் ரெண்டு பேரையுமே நான் குற்றம் சொல்வேன். ஒருத்தருக்கொருத்தர் சுயநலத்துடன் செயல்பட்டதன் விளைவுதான் இன்றைய நிலைமை. இதுல பாவப்பட்டது அம்மாவை நேசிச்ச லட்சக் கணக்கான தொண்டர்கள்தான்.”
`ஆரம்பத்தில் ’தீபா பேரவை’ யெல்லாம் தொடங்கினீங்க. பிறகு சைலண்ட் ஆகிட்டீங்களே ஏன்?’

’’ஆளாளுக்கு அடிச்சிகிட்டிருந்ததைப் பார்த்துட்டு சிலர் எங்கிட்ட வந்து ‘நீங்க ஏதாச்சும் செய்யுங்க’னு கேட்டதால தொடங்கினேன். ஆனா நான் அப்படி வந்ததையே ரொம்ப பேரு விரும்பலை. ரொம்ப பேருன்னா அவங்க மத்த கட்சிக்காரங்க இல்ல. அதிமுகவில் இருந்தவங்கதான்.
’அமைதியா ஒதுங்கிடு’னு நேரிலேயே மிரட்டினாங்க. அதனால ஒருகட்டத்துல பேரவையை அதிமுகவிலேயே இணைச்சுடலாம்னு முடிவு செய்தேன். அப்பக் கூட இ.பி.எஸ் தரப்பு என்னைக் கண்டுக்கல. கண்டுக்கலங்கிறது மட்டுமில்லாம என்னை ரொம்ப கேவலமா பேசினாங்க. அதனால ஒ.பி.எஸ். மூலமா பேசி கட்சியோட இணைச்சுட்டு எம்பாட்டுக்கு ஒதுங்கிட்டேன்.”
“எடப்பாடி பழனிசாமிக்கு உங்க மீது ஏன் வெறுப்பு?”

“எனக்குமே அந்தக்காரணம் தெரியலை. போயஸ் கார்டன் வீடு கோர்ட் மூலமா எனக்கு வந்த புதுசுல, வீட்டைக் கேட்டாங்க. அவருடைய தூதுவரா சிலர் வந்து பேசினாங்க. எனக்கு என் அத்தையின் நினைவா இருக்கணும்னு மறுத்துட்டேன். அந்தக் கடுப்பு இருக்கலாம்னு நினைக்கேன்.
ஆனா நான் யாரையும் எதிரியா பார்க்கலை. இந்த பிறந்த நாளுக்கும் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளிட்ட எல்லாரையுமேதான் கூப்பிட்டேன். ஒ.பி.எஸ் வரமுடியாட்டியும் ரெஸ்பான்ஸ் பண்ணுறார். இ.பி.எஸ் தரப்பு வழக்கம் போல நம்மை கண்டுக்கறதில்ல. இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே, இன்னைக்கு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு என்ன? ஏன் வர மாட்டேங்கிறாங்கனு அவங்ககிட்டதான் நீங்க கேக்கணும்.”

`சசிகலா குடும்பத்துடன் தொடர்பில் இருக்கீங்களா?’
“அவங்ககிட்ட நான் பேசினது இல்ல. அவங்க சகோதரர் திவாகரனை ஒரு தடவை சந்திச்சதா ஞாபகம். தொடர்பு அவ்வளவா இல்லையே தவிர பகை கிடையாது. அந்தம்மா வேற இப்ப புதுக்கட்சி தொடங்கியிருக்காங்க போல, அவங்களுக்கு என் வாழ்த்துகள்.”

“திருச்சி வேலுசாமிகூட உங்க வீட்டுக்கு வந்திருந்தார் போல..”
“அவர் எங்களுக்கு குடும்ப நண்பர். அதனால ’அம்மா பிறந்த நாள், நீங்க வரணும்னு நான் கூப்பிட்டேன். வந்து போனார்.”
“தேர்தல் வருதே, ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?’
“ரொம்ப கஷ்டமான ஒரு சூழல்ல கட்சி இருக்கு. அதனால என்ன சொல்றதுன்னே தெரியல.”
`அரசியலுக்கு வர்ற எண்ணம் இப்போதைக்கு உங்களுக்கு இல்லையா?’
`இதுக்குமே காலம்தான் பதில் சொல்லணும்.’
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
