மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
மத்திய அரசின் புதிய மின்சார சட்ட விதி 23-ன்படி, ஒரு மின்வாரியத்தின் ஆண்டு வருவாய்க்கும், அதன் தேவைக்கும் (Expenditure) இடையே எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. அதாவது, நஷ்டத்தில் இயங்கக் கூடாது. இந்த சட்ட விதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர். “மத்திய அரசின் இந்த விதிகளால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்பதே அவர்களின் முக்கிய வாதமாக இருந்தது.

தலைமை நீதிபதியின் அதிரடி கருத்துகள்:
1. ஆபத்தான கலாசாரம்:
“பெறும் சேவைகளுக்குப் பொதுமக்கள் பணம் செலுத்தாமல் இருப்பது ஓர் ஆபத்தான கலாசாரத்தை உருவாக்கி வருகிறது. இது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிலவும் மோசமான நிலை. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.”
2. இலவச மின்சாரம் குறித்த கேள்வி:
“இலவச மின்சாரத்தைத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் வழங்குகிறீர்கள். மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள்கூட இந்த இலவசத்தைப் பெறுகிறார்கள். இந்தத் தொகையை மிச்சப்படுத்தி ஏழை மாணவர்களுக்காகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கட்டலாமே?”
3. இலவசங்கள் Vs உள்கட்டமைப்பு:
“இலவச ஸ்கூட்டி, இலவசப் பொருள்கள் என அனைத்தையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாகத் தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்தால் அது அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்குமே? நான் தமிழ்நாட்டை மட்டும் சொல்லவில்லை, வட இந்தியா, தென்னிந்தியா என நாடு முழுவதும் இதே நிலைதான்.”
4. உழைக்கும் ஆர்வம் குறைய வாய்ப்பு:
“சமூகநீதி என்ற பெயரில் மூன்று வேளை உணவு, பேருந்து பயணம், சைக்கிள், ஸ்கூட்டர் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துவிட்டால், பிறகு மக்கள் எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும்? பல மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் தவித்தாலும், தேர்தல் அரசியலுக்காக இதைப் பின்பற்றுகிறீர்கள்.”

5. தகுதியானவர்களுக்கு மட்டும் முன்னுரிமை:
“கல்விச் செலவை ஏற்க முடியாத குழந்தைகளுக்கு அரசு உதவுவது கடமை. ஆனால், வசதி படைத்தவர்களுக்கும் அந்த இலவசங்களைக் கொடுப்பது ஏன்? மாநில அரசுகள் தங்களது கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.”
என அடுக்கடுக்கான பல அதிரடி கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் இந்த மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
