இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35,000த்தை நெருங்கியுள்ளது.
காஸாவில் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த வீரர்களுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி அதிபர் எர்டோகன்
அங்காரா நகரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேர் துருக்கியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படைக்கு துருக்கி ஆதரவும் அடைக்கலமும் அளிப்பதாகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துருக்கி அதிபர் தவறுதலாக பேசியிருப்பதாகவும், அவர் “காஸாவை சேர்ந்த 1,000 பேர் தங்கள் நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” கூற முற்பட்டார் எனவும் துருக்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
