Sorting by

×

ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் அமெரிக்கா கூடுதல் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானில் எந்த இடத்தை குறிவைத்து தாக்கினாலும் உடனே ஈரான் அது போன்ற இடங்களை இஸ்ரேலில் குறிவைத்து தாக்கி வருகிறது.

கடந்த வாரம் ஈரானில் உலகின் மிகப்பெரிய எரிவாயு மண்டலங்களில் ஒன்றாக கருதப்படும் தெற்கு பார்ஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு மையங்களில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

இதில் அமெரிக்கா தலையிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இஸ்ரேல் நேற்று ஈரானில் உள்ள நடன்ஸ் நகரில் இருக்கும் ஷாஹித் அஹ்மதி-ரோஷன் அணு ஆராய்ச்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரில் ஈரான் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியது. இந்த நகரில் இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் இருக்கிறது. ஈரான் அனுப்பிய ஏவுகணையை இஸ்ரேல் வான் தடுப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்த தவறிவிட்டன. இதனால் ஏவுகணை குடியிருப்பு வளாகத்தில் விழுந்து கட்டடங்கள் இடிந்ததில் 47 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவச் சேவை பிரிவு அதிகாரி மேகன் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தாக்குதலில் காயமடைந்த 36-க்கும் மேற்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏவுகணைத் துண்டுகள் விழுந்தும், பாதுகாப்பு அரண்களை நோக்கி ஓடும்போதும் இந்த காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். குறிப்பாக 10 மற்றும் 12 வயது சிறார்கள் காயம் அடைந்துள்ளனர்”என்றார்.

வான் பாதுகாப்பு ஏவுகணையை தடுக்க தவறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆராய்ச்சி மையங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. டிமோனா நகரம் குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் இந்திய யூதர்களின் முக்கிய மையமாகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த இந்திய யூதர்கள் ஆவர். சுமார் 7,500 இந்திய வம்சாவளியினர் இங்கு வாழ்கின்றனர். இது அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும்.

கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை தாக்குவோம்

ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா (PBUH) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், “முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஒருவேளை எதிரிகளால் ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்”என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல்களை அனுமதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *