Sorting by

×

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போர் 20-வது நாளை எட்டியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் போர் தீவிரமடைந்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்காவிற்குச் சொந்தமான 16 ராணுவ விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஆளில்லா ஏவுகணைத் தாங்கி ட்ரோன்கள் மற்றும் மனிதர்கள் இயக்கும் போர் விமானங்கள் ஆகியவையும் அடங்கும். குறிப்பாக, MQ-9 Reaper வகை ட்ரோன்கள் ஈரானிய வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதல்

ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம், வெளியிட்டிருக்கும் செய்தியில், அமெரிக்க ராணுவம் கணிசமான இழப்புகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அனைத்து இழப்புகளும் ஈரானின் நேரடித் தாக்குதலால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் நிலைகொண்டிருந்த மூன்று F-15 போர் விமானங்கள், அமெரிக்கப் படைகளின் தவறான இலக்கு தாக்குதலில் சிக்கி அழிந்தன. மேலும், எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த KC-135 வகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 வீரர்களும் உயிரிழந்தனர்.

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 விமானங்கள் சேதமடைந்தன.

ஈரானின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் (Air Defence Systems), அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன்களைத் துல்லியமாகக் கண்டுபிடித்து அழிப்பதில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இதுவரை 9 ‘ரீப்பர்’ ட்ரோன்கள் பறந்துகொண்டிருக்கும்போதே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஒன்று ஜோர்டான் விமான தளத்தில் இருந்தபோதே ஏவுகணையால் தாக்கப்பட்டது. மேலும் இரண்டு ட்ரோன்கள் மாயமாகியுள்ளன.

உலகின் மிக நவீனமான ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான F-35 Lightning II ஈரானிய வான்வெளியில் பறந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

பலத்த சேதமடைந்த அந்த விமானம், அவசரமாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளத்தில் தரையிறக்கப்பட்டது. விமானி பாதுகாப்பாக உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரானின் வான் பரப்பில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்துவது அமெரிக்கா – இஸ்ரேல் படைகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.

இது குறித்து அமெரிக்கப் படைகளின் தலைமைத் தளபதி டான் கெய்ன், “அமெரிக்கப் படைகள் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வான் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன; ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் கட்டுப்பாடு கிடைக்கவில்லை” என ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து அமெரிக்க விமானங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

ராணுவ ஆய்வாளர் பீட்டர் லேடன், “போரின் ஆரம்பக் கட்டங்களை விட இப்போது ஒவ்வொரு நாளும் வான்வெளியில் பறக்கும் போர் விமானங்களின் எண்ணிக்கை (Sorties) பன்மடங்கு அதிகரித்துள்ளது” என்கிறார்.

ஓய்வில்லாத இத்தகைய தொடர் நடவடிக்கைகள், இயந்திரக் கோளாறுகள் மற்றும் மனிதத் தவறுகளுக்கு வழிவகுக்கின்றன.

உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகிக்கப்படும் மிக முக்கியமான பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி விளங்குகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

இந்த முக்கியக் கடல்வழிப் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கப் படைகள் கடுமையாகப் போராடி வருகின்றன. ஆனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஈரானின் நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் அங்கு பறக்கும் அமெரிக்க விமானங்களுக்குத் தொடர்ந்து சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், வான்வெளியில் முழு அதிகாரத்தைச் செலுத்த நினைக்கும் அமெரிக்காவிற்கு, ஈரானின் தற்காப்பு அரண் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *