Sorting by

×

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, ‘நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் போய் இறங்கி வேலை பாருங்கள்!’ என வாழ்த்தி அனுப்பியிருக்கிறாராம் விஜய்.

விஜய்யை சந்திக்க வந்த நிர்வாகிகள்
விஜய்யை சந்திக்க வந்த நிர்வாகிகள்

தவெக சார்பில் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் நடைபெற்றிருந்தது. விருப்பமனுக்கள் அளித்தவர்களில் தொகுதிக்கு 2-3 பேரை பில்டர் செய்து அவர்களிலிருந்து ஒருவரை கட்சிப்பணி, பணம், செல்வாக்கு, சமூக அடிப்படையில் ஒருவரை தேர்வு செய்து ஒரு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விஜய்க்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தப் பட்டியலிலிருந்த வேட்பாளர்களை கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியே விஜய் நேரில் சந்தித்து ஆலோசித்து வாழ்த்து கூறவிருந்தார். அந்த சமயத்தில்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் எழ, காங்கிரஸூக்காக காத்திருந்தது தவெக. இதனால் அப்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய்யால் வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில்தான், பாஜக தரப்பு விஜய்யுடன் கூட்டணி பேசுவதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. கூட்டணிக்கான முயற்சிகளை பாஜக தரப்பு தீவிரமாக முன்னெடுத்தாலும், விஜய்க்கு அந்த கூட்டணியில் உடன்பாடில்லை என பனையூர் தரப்பு கிசுகிசுக்கின்றனர்.

இந்நிலையில்தான், முதற்கட்ட வேட்பாளர்களை இப்போது அழைத்துப் பேசலாம். இதன் மூலம் என்.டி.ஏ கூட்டணிக்கு தவெக செல்கிறது எனும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என விஜய் தரப்பு நினைத்திருக்கிறது. இதனால்தான் மார்ச் 10 ஆம் தேதியான இன்று வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். திடீரென டெல்லியிலிருந்து சிபிஐ யும் இதே நாளில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்ப, இந்த நிகழ்வை காரணம் காட்டியே ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டிருந்தார் விஜய்.

சிபிஐ சம்மன் விவகாரம் பரவியதால் எப்படியும் இன்று நம்மை நேரில் அழைக்க வாய்ப்பில்லை என தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் அலட்சியமாக இருந்தனர். அவர்களுக்கெல்லாம் தலைமையிலிருந்து நேற்று மதியம் அழைப்பு சென்றிருக்கிறது. ‘திட்டமிட்டப்படி தலைவருடன் சந்திப்பு இருக்கும். காலை 10:30 மணிக்கு நல்ல நேரம் இருக்கிறது. அதற்குள் சரியாக வந்துவிடுங்கள்’ என தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

`நல்ல நேரம்’

இன்று காலை 9 மணியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அந்த வேட்பாளர்கள் வரத் தொடங்கிவிட்டனர். ஆனால், யாரையும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. நல்ல நேரம் பிறந்தவுடன் அலுவலகத்துக்குள் காலடி வையுங்கள் என தகவல் சொல்லப்பட்டுவிட்டது. இதனால் பனையூரை ரவுண்ட் அடித்துவிட்டு சரியாக 10:30 மணி ஆனவுடன் நிர்வாகிகள் வேக வேகமாக அலுவலகத்துக்குள் வர ஆரம்பித்தனர். புஸ்ஸி ஆனந்தும் நெற்றியில் திருநீர் குங்குமத்தோடு கரைவேட்டியோடு வந்து சேர்ந்தார். விஜய் சரியாக 11:35 மணிக்கு அலுவலகம் வந்து சேர்ந்தார்.

செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ், மரிய வில்சன், ராஜசேகர் போன்ற தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதலில் இவர்களை தனித்தனியாக அழைத்து அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தொகுதிகளை பற்றி பேசிவிட்டு வாழ்த்து கூறி அனுப்பியிருக்கிறார் விஜய்.

அதன்பிறகு, அடுத்தக்கட்ட நிர்வாகிகளில் வேட்பாளர்களாக டிக் அடிக்கப்பட்டிருப்பவர்களை ஐந்து ஐந்து பேராக அழைத்த விஜய், ‘உங்க எல்லாரையும் எம்.எல்.ஏவா பார்க்க ஆசைப்படுறேன். மக்களுக்காகதான் நாம அரசியலுக்கு வந்துருக்கோம். என்னோட வேலையையே விட்டுட்டு வந்துருக்கேன். இந்தப் பயணத்துல நிறைய பிரச்னைகள் வரலாம். எல்லாத்தையும் சேர்ந்து சமாளிப்போம். தைரியமா போயி தொகுதியில வேலை பாருங்க!’ என தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

ஸ்வீட் பாக்ஸ் – பொக்கே.!

விஜய்யை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட அந்தத் தொகுதியின் பெயர் எழுதப்பட்ட ஒரு பையும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பையில் தொகுதியின் நிலவரம், வாக்காளர் தரவுகள், பூத் கமிட்டி விவரங்கள் மற்றும் வேட்பாளர் அடுத்த 30 நாட்களில் என்ன செய்ய வேண்டும்? என்பவைப் போன்ற விவரங்கள் அடங்கிய பென் ட்ரைவும் புக்லெட்டும் இருந்திருக்கிறது.

இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள்தான் வரவைக்கப்பட்டார்கள் என்பதால் சில வேட்பாளர்கள் ஸ்வீட் பாக்ஸோடும் பொக்கேவோடும் வந்திருந்தனர். விஜய்யை சந்தித்துவிட்டு வந்து சக நிர்வாகிகளுக்கு ஸ்வீட் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர்.

நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பை
நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பை

இன்று 60 நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து கூறியிருக்கும் விஜய், அடுத்தடுத்த நாட்களில் எஞ்சிய வேட்பாளர்களையும் பனையூருக்கு அழைக்கவிருக்கிறார்.

விஜய் இன்று நேரில் அழைக்கப்பட்டிருந்த நிர்வாகிகள் :

அரியலூர் தொகுதி – சிவா

தஞ்சாவூர் தொகுதி – சரவணன்

திருவள்ளூர் தொகுதி – ML பிரபு

அரக்கோணம் தொகுதி – காந்திராஜ்

விருகம்பாக்கம் தொகுதி – சபரிநாதன் (விஜய் உதவியாளர் ராஜேந்திரன் மகன்)

கிணத்துக்கடவு தொகுதி – விக்னேஷ்

சேலம் தெற்கு தொகுதி – பார்த்திபன்

புதுக்கோட்டை தொகுதி – பர்வேஸ்

ஆர் கே நகர் தொகுதி – மரியா வில்சன்

வேளச்சேரி – தாமு

நாகர்கோவில் – மாதவன்

கும்மிடிப்பூண்டி – விஜி

திருக்கோவிலூர் – பரணி பாலாஜி

திருமயம் – சிந்துஜா

தாம்பரம் – சரத்

செஞ்சி – குண சரவணன்

திருச்செங்கோடு – அருண்ராஜ்

ஶ்ரீ ரங்கம் – கு ப கிருஷ்ணன்

ஶ்ரீ பெரும்பதூர் – தென்னரசு

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்

காரைக்குடி – பிரபு

அம்பத்தூர் – பாலமுருகன்

பாபநாசம் – அசாருதீன்

அணைக்கட்டு – வேல்முருகன்

கொளத்தூர் – வி எஸ் பாபு

திரு வி க நகர் – சிவா

மதுரை மேற்கு – விஜய் அன்பன் கல்லாணை

சோழிங்கநல்லூர் – சரவணன்

கரூர் – மதியழகன்

ஈரோடு கிழக்கு – பாலாஜி

கோவை வடக்கு – சம்பத்குமார்

துறைமுகம் – விஜயகுமார்

குளச்சல் – பிரேம்

தருமபுரி – சிவன்

தி.நகர் – ஆனந்த்

திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல் குமார்

வில்லிவாக்கம் – ஆதவ்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *