Sorting by

×

தொட்டபெட்டா மலைச் சிகரம், பைக்கார படகு இல்லம் பகுதிகளுக்குச் செல்ல தடை உள்ளதால் அங்கு செல்ல முடியாததால் உதகை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

உதகையில்  தாவரவியல்  பூங்கா, ரோஜா பூங்கா , படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்டவை முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத் துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமானப் பணி வியாழக்கிழமை தொடங்கியதால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியவில்லை.

அதேபோல பைக்காரா  படகு இல்லத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகள் ஏப்ரலில் தொடங்கி இதுவரை நிறைவுறாமல் உள்ளதால் இங்கும் செல்ல முடியாமல் உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

முன் கூட்டியே திட்டமிடல் இல்லாததால்தான் இதுபோன்று நிகழ்ந்துள்ளதாகவும், கட்டுமானப் பணிகளை மே மாத சீசனுக்கு முன்பாகவோ அல்லது சீசன்  முடிந்த பின்போ மேற்கொண்டிருந்தால்  நலமாயிருந்திருக்கும் என்று சுற்றுலா ஆா்வலா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து உதகை வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள சோதனைச் சாவடியால் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் இதனால் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் காவல் துறையினா் கேட்டுக் கொண்டதால் சோதனைச் சாவடி அலுவலகம் அமைக்க அவசரகதியில் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும் விரைந்து இப் பணிகள் முடிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என்றாா்.

அதேபோல பைக்காரா  படகு இல்லப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி வரும் 20-ஆம் தேதிக்குள் முடிந்து விடும் என்று ஒப்பந்ததாரா் கூறியுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

முறையான திட்டமிடல் இல்லாததால் கோடை சீசனுக்கு உதகை வந்த சுற்றுலாப்   பயணிகள், முக்கியமான இரண்டு சுற்றுலாதலங்களை பாா்க்க முடியாமல் செல்வதற்கு வனத் துறையின்  முறையான திட்டமிடல் இல்லாததே காரணம் என சுற்றுலாப் பயணிகள்  குற்றஞ்சாட்டியுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *